கட்சிக்கு ஒருவர்னு சொன்னீங்களே.. ஓபிஎஸ் என்ன ஸ்பெஷலா? சட்டசபையை அமளியாக்கிய எடப்பாடி.. அப்பாவு பதில்
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீதான விவாதத்தில் ஓபிஎஸ்ஸை பேச அனுமதித்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 1 ஆம் தேதி அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அக்டோபர் 28 ஆம் தேதி அனுப்பப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.

சட்ட மசோதா
சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நவம்பர் 24 ஆம் தேதி அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சட்டத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதி அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்கள்.

ஆளுநர் ரவி
அப்போது சட்ட மசோதா சம்பந்தமாக ஆளுநர் ரவி சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார். அதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறி கடந்த 6ஆம் தேதி சட்ட மசோதாவை அரசுக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
இந்த நிலையில் ரம்மி தடை மசோதாவுக்கு மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தின் போது கட்சிக்கு ஒருவர் எழுந்து ஆதரவா எதிர்ப்பா என சொல்லலாம் என சபாநாயகர் தெரிவித்தார்.

அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்
அதன்படி அதிமுக சார்பில் தளவாய் சுந்தரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஆதரவு கொடுப்பதாக கூறிவிட்டு அமர்ந்தார். மேலும் ஓபிஎஸ் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பளித்தார். அப்போது ஓபிஎஸ் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி. இந்த மசோதாவை அதிமுக முழு மனதாக ஏற்று ஆதரவு கொடுக்கிறது என்றார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். அவர் பேசுகையில் கட்சிக்கு ஒருவர் என சொல்லிவிட்டு ஓபிஎஸ்ஸுக்கு எதற்காக பேச அனுமதி கொடுத்தீர்கள். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் அவர் இல்லை என்றாலும் அவரது இருக்கையை மாற்றாமல் உள்ளீர்கள் என கேட்டு அமளியில் ஈடுபட்டார்.

அப்பாவு விளக்கம்
உடனே சபாநாயகர் அப்பாவு பேசுகையில் ஓபிஎஸ் பேச அனுமதி அளித்ததில் எனக்கோ இந்த பேரவைக்கோ எந்த உள்நோக்கமும் இல்லை. முக்கியமான சட்ட மசோதா, ஓபிஎஸ் முன்னாள் முதல்வர், அனுபவசாலி, தற்போது எம்எல்ஏ அந்த முறையில்தான் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனவே அதிமுக உறுப்பினர்கள் அமருங்கள் என்றார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications