தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் வெளியேற சபாநாயகர் உத்தரவு.. அறைகளுக்கும் சீல்!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை உடனடியாக விடுதியில் இருந்து வெளியேறுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட காலமாகவே இழுத்து கொண்டு வந்த 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு ஒருவழியாக கிடைத்துவிட்டது. இதனையடுத்து, 18 எம்எல்ஏக்களும் தகுதி இழந்துவிட்டதாக நீதிமன்றம் உறுதியும் செய்துவிட்டது.
எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களும் தற்போது எம்எல்ஏக்களே இல்லை என்பதால் அவர்களுக்கு அளித்து வந்த அனைத்து சலுகைகளும் விலக்கி கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் எம்எல்ஏ ஹாஸ்டல் உள்ளது. இங்கு 234 எம்எல்ஏக்களும் தங்கும் வகையில் அறைகள் உள்ளன. இந்த விடுதியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் விடுதியில் அளிக்கப்பட்டுள்ள தங்களது அறைகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
மேலும் 18 எம்எல்ஏக்களின் அறைகளையும் பூட்டி சீல் வைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏகளின் விடுதி அறைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. அத்துடன் "இனி இந்த அறை இச்செயலகம் வசம் எடுத்துக்கொள்ளப்பட்டது, அனுமதியின்றி அறையை யாரும் திறக்கக்கூடாது" என நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.