இன்று ஆடிப் பெருக்கு.. சொத்துக்கள் பதிய பத்திர ஆபிஸ் போறீங்களா.. பதிவுத்துறை சூப்பர் வசதி
சென்னை: ஆடிப் பெருக்கு பண்டிகையான இன்று பத்திரங்கள் பதிவதை மக்கள் விரும்புவார்கள். எனவே அவர்களின் வசதிக்காக பொது விடுமுறை நாளான இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை அறிவித்துள்ளது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி, ஆகஸ்ட் 3-ம் தேதியான இன்று (சனிக்கிழமை) பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தார்.

இதுபற்றி வியாழக்கிழமை அன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், " பொதுமக்கள் அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புகின்றனர். எனவே, பொது விடுமுறை நாளான ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆவணப்பதிவு மேற்கொள்ள அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமை (இன்று) காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும். இது தொடர்பாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
ஆடிப்பெருக்கு நாளன்று அதிகளவிலான பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம் என்பதால் அன்றைய தினம் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு வழக்கத்தைவிட அதிக பதிவுகள் நடைபெறும். அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கடந்த 18 நாளில் இன்று தான் பத்திரங்கள் பதிவதை விரும்புவார்கள் என்பதால் பத்தர அலுவலகங்களில் இன்று கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும்.
சொத்துக்கள் வாங்கும் மக்கள் அதை எப்போதுமே சுபமுகூர்த்த நாளில் தங்கள் பெயரில் மாற்றுவதை விரும்புகிறார்கள். அவர்களின் வசதிக்காகவே, ஆடிப்பெருக்கு, தைப்பூசம், சுபமூகூர்த்த தினங்கள் உள்பட பல்வேறு விஷேச நாட்கள், சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட எந்த விடுமுறை தினத்தில் வந்தாலும் பத்திர அலுவலகங்கள் இயங்குகிறது. அன்று பத்திரப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு கட்டணமும் அரசு வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications