மகா சிவராத்திரி, வார விடுமுறை.. கிளாம்பாக்கம் கிளம்புவீங்களா.. எஸ்இடிசி வெளியிட்ட குட்நியூஸ்
சென்னை: மகா சிவராத்திரி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு நாளை முதல் வருகிற 9-ந் தேதி வரை 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
மகா சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் வருகிற 8-ந் தேதியான வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று இரவு பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள்.. இதனால் அன்றைய தினம் திருவண்ணாமலை உள்பட பல்வேறு சிவன் கோயிலுக்கு பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். இதேபோல் அடுத்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு என்பதால் அன்றும் விடுமுறை.. எனவே பலரும் 3 நாட்கள் மொத்தமாக வெளியில் செல்வார்கள்.. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: "சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருவதாலும், 9, 10-ந் தேதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்கள் என்பதாலும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7-ந் தேதி (நாளை) வியாழக்கிழமை அன்று 270 பஸ்களும், 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 390 பஸ்களும், 9-ந் தேதி (சனிக்கிழமை) 430 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 8 மற்றும் 9-ந் தேதிகளில் 70 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1,360 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 9 ஆயிரத்து 96 பயணிகளும், வெள்ளிக்கிழமை 7 ஆயிரத்து 268 பயணிகளும் சனிக்கிழமை 3 ஆயிரத்து 769 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 9 ஆயிரத்து 11 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி (ஆப்) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications