விநாயகர் சதுர்த்தி+வீக் எண்ட்.. சொந்த ஊர் செல்ல.. தமிழ்நாடு முழுவதும் 1250 ஸ்பெஷல் பஸ்
சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் அதையொட்டி வரும் விநாயகர் சதுர்த்தி காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்து வருகின்றனர். சென்னையை பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

இப்படி சொந்த ஊர் போகும் போது போதுமான பேருந்துகள் கிடைக்காததால் தனியார் பேருந்துகளை நோக்கி நகர்கின்றனர். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் நன்றாக காசு பார்க்கின்றன. எனவே பயணிகளின் வசதிக்காக இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இன்று "வெள்ளிக்கிழமை செப்டம்பம் 15ஆம் தேதி சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், சனிக்கிழமை நாளைய தினம் 200 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று செப்டம்பர் 19ஆம் தேதி திங்கள்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப தேவைப்பட்டால் மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications