தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜா்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: நிதி மோசடி வழக்கில் நிபந்தனைகளை பின்பற்றாத தேவநாதனை கைது செய்து ஆஜா்படுத்தும் வகையில் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தின் இயக்குநராகச் செயல்பட்டார் தேவநாதன். இவா் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேவநாதனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அக்டோபர் 30-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி டெபாசிட் தொகையாக செலுத்த உத்தரவிட்டிருந்தது.
மேலும், தேவநாதன் விசாரணைக்குத் தேவையான போது ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக்கூடாது மற்றும் வேறு எங்கும் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் உயா்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றாத தேவநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதலீட்டாளா்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆா்.திருமூா்த்தி சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த எந்த ஜாமீன் நிபந்தனைகளையும் தேவநாதன் யாதவ் நிறைவேற்றவில்லை. சென்னை உயர்நீதிமன்ற விதித்த காலக்கெடுவுக்குள் நூறு கோடி ரூபாய் வைப்புத் தொகை செலுத்தவில்லை, சரணடையவில்லை. மேலும் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால் அது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவரை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தேவநாதனை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications