‘உழைப்பு உழைப்பு உழைப்பு - அதுதான் மு.க.ஸ்டாலின்’ - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்பெஷல் அலங்காரம்!
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதையொட்டி, கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையோரம் அமைந்திருக்கும் கருணாநிதியின் நினைவிடத்தில் 'உழைப்பு உழைப்பு உழைப்பு - அதுதான் ஸ்டாலின்' என மலரினால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் நாள்தோறும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மீண்டும் முக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
திமுக பொதுக் குழுவில் 2-ஆவது முறையாக திமுக தலைவரானார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக உட்கட்சி தேர்தல்
திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். இதையடுத்து திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
திமுக பொதுக்குழு
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் விங்க்ஸ் கன்வென்ஷன் செண்டரில் திமுக பொதுக்குழு கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுகவின் 15-வது பொதுத் தேர்தலை ஆற்காடு வீராசாமி ஆணையாளராக இருந்து நடத்துகிறார். தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4,100 பேர் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மீண்டும் தலைவராக ஸ்டாலின்
பொதுக்குழுவில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் , 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது முறையாக திமுக தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
துரைமுருகன், டிஆர் பாலு
அதேபோல் பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் மட்டுமே போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் அவர்கள் மீண்டும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, தணிக்கைக் குழு உறுப்பினர்களாக பிச்சாண்டி, வேலுச்சாமி, முகமது சகி, சரவணன் ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கனிமொழி எம்.பி
திமுக-வின் துணை பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், திமுக மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களை துணைப் பொதுச் செயலாளர்களாக நியமித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
உழைப்பு உழைப்பு உழைப்பு
இந்நிலையில் இன்றைய பொதுக்குழுவில் திமுக தலைவராக மீண்டும் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதனை கொண்டாடும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் "உழைப்பு உழைப்பு உழைப்பு - அதுதான் மு.க.ஸ்டாலின்" என மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் பற்றி கருணாநிதி சொன்ன விஷயத்தை, அவர் மீண்டும் தலைவராகப் பதவியேற்கும் நாளில் மலர்களால் எழுதி அலங்கரித்துள்ளனர்.
ஸ்டாலினின் சிறப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் கருணாநிதி நினைவிடத்தில் தினமும் புதுப்புது மலர் அலங்காரம் செய்யப்பட்டு வருவது வழக்கம். ஒரு நாள் வைக்கப்படும் அலங்காரம் மறுநாள் காலை 7 மணிக்கு அகற்றப்பட்டு, புதிய அலங்காரம் செய்யப்படுகிறது. கலை இயக்குனர் ஜே.பி.கிருஷ்ணா குழுவினர் வடிவமைத்து வருகின்றனர். அந்தவகையில் இன்று திமுக தலைவராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்கும் முக ஸ்டாலினின் சிறப்பைக் கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.