முன்ஜாமீனுக்கு முன்பே கைதாகிறாரா அமர்பிரசாத் ரெட்டி? தனிப்படை போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்!
சென்னை: பெண்ணை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை நகருக்கும், குஜராத் மாநிலத்திற்கும் விரைந்துள்ளனர்.
கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக ஆட்களை அழைத்து வர பாஜக விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தரப்பில் கோட்டூர்புரத்தை சேர்ந்த மாவட்ட துணைத் தலைவர் ஆண்டாளுக்கு ரூ 50 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சித்ரா நகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும் மகளிர் அணியை சேர்ந்த நிவேதாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாம்.
இந்த நிலையில் 21 ஆம் தேதி இரவு அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா உள்ளிட்டோர் ஆண்டாளின் வீட்டிற்குள் நுழைந்து அவரையும் அவரது சகோதரி தேவியையும் தாக்கியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் தேவியும் ஆண்டாளும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்களை அவர்களுடைய உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட அவர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அமர்பிரசாத் ரெட்டி, அவருடைய கார் ஓட்டுநர் ஸ்ரீதரக் உள்ளிட்டோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அமர்பிரசாத்தின் ஓட்டுநர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்ட நிலையில் அமர்பிரசாத் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள அமர்பிரசாத் ரெட்டியை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தன்னை போலீஸார் கைது செய்யாதிருக்கும் வகையில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சூழலில் அமர்பிரசாத் ரெட்டியை தேடி தனிப்படை போலீஸார் மும்பைக்கும் குஜராத் மாநிலத்திற்கும் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications