லீவ் முடிஞ்சு சென்னைக்கு புறப்படுறீங்களா.. வெளியான குட் நியூஸ்.. 2 சிறப்பு ரயில்கள்.. ரூட் இதுதான்
சென்னை: தொடர் விடுமுறை நாளையுடன் முடிவதால் சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் நாளை சென்னை திரும்ப ஆயத்தமாகி வரும் நிலையில், சென்னைக்கு 2 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு விடுமுறை தினம் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாகும். இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், கடந்த புதன்கிழமை இரவு ரயில், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் எல்லாம் பயணிகள் நிற்க கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு டிக்கெட் விலை தாறுமாறாக இருந்தது.
2 சிறப்பு ரயில்கள்: தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் முழுவதும் 580 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாளை விடுமுறை முடிந்து சென்னக்கு திரும்ப பயணிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகள், ரயில்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்துள்ளன.
அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் கட்டணமும் பலமடங்கு உயர்ந்துள்ளன. சாதாரண இருக்கை வசதி கொண்ட பேருந்துகளிலேயே 1,500க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது.
கோவை - சென்னை: இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவையிலிருந்து இரவு 11.30க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது நள்ளிரவு (ஜன.29) 12:10 க்கு திருப்பூர் வந்து சேரும். நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு, 2 மணியளவில் சேலம் வந்து ஜோலார்பேட்டை வழியாக காலை 8:30க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்து அடையும். இதேபோல் சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் வரும் 29 ஆம் தேதி (திங்கட்கிழமை) சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11. 05 மணிக்கு கோவையை சென்றடையும்.
கன்னியாகுமரி - சென்னை: இதேபோல் கன்னியாகுமரி சென்னை சிறப்பு ரயில், (வண்டி எண் 06041) கன்னியாகுமரியில் இருந்து வரும் 28 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இதேபோல் சென்னை - கன்னியாகுமரி சிறப்பு ரயில், (வண்டி எண் 06042) வரும் 29 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.45 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.












Click it and Unblock the Notifications