கன்னியாகுமரி, ஈரோடு மக்களுக்கு தீபாவளி பரிசு.. ரயில்வே கொடுத்த சூப்பர் அப்டேட்
சென்னை: தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை - கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகவும், குதூகலமாகவும் கொண்டாடும் பண்டிகை என்றால் தீபாவளிதான். இந்தியாவில் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என ஊரே களைகட்டும். இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். பயணிகளின் வசதிக்காக பண்டிகையையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை இயக்கப்படவுள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை வருகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 நாள்கள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே படுக்கை வசதிகொண்ட பேருந்துகளின் முன்பதிவு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு சென்னை - கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று 11.25 மணிக்கும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை மறுநாள் (அக்டோபர் 28) பிற்பகல் 2.45 மணிக்கு சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல, ஈரோடு - சென்னை சென்ட்ரல் இடையே அக்டோபர் 30, 31, நவம்பர் 3 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு இல்லை. இந்த விரைவு ரயில் ஈரோட்டில் இருந்து காலை 4.55 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினமே காலை 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையவுள்ளது. மறுமார்க்கமாக இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.
தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications