சென்னை டூ திருநெல்வேலிக்கு ஸ்பெஷல் வந்தே பாரத்.. தீபாவளி பரிசு கொடுத்த தெற்கு ரயில்வே.. விவரம்
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரயிலை தெற்கு ரயிலை அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொழில் நிமித்தமாகவும் பணி நிமித்தமாகவும் வசிக்கும் மக்கள் பண்டிகை காலங்களை சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வெளியூர்களுக்கு செல்ல ரயில் , பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அதிலும் தீபாவளி பண்டிகைக்கு இருக்கு பயணிகள் கூட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.

அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயில், பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகள் நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும். இந்த நிலையில், தான், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்து வருகிறது. சென்னையில் இருந்து நெல்லை, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில் இருமார்க்கமாகவும் தலா 3 நாட்கள் இயங்க உள்ளது. திருநெல்வேலி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06052) வரும் 9, 16, 23 ஆகிய நாட்களில் (வியாழக்கிழமைகளில்) இயங்க உள்ளது.
இந்த ரயில் 3 நாட்களும் மாலை 3 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். அதன்பிறகு 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வண்டி எண் 06067 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வரும் 9 ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்படும். இந்த ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அங்கிருந்து மறுமார்க்கமாக பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு 11.15 மணிக்கு வந்து சேரும். இந்த வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 8 பெட்டிகளை கொண்டதாகும்.
இந்த வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஏற்கனவே சென்னை - நெல்லை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில், காலை 6மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50க்கு சென்னை எழும்பூரு வந்தடையும். மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடைகிறது.












Click it and Unblock the Notifications