வந்தாச்சு.. சென்னையில் இனி இந்த வேகத்தில் தான் வாகனம் ஓட்ட வேண்டும்.. போக்குவரத்து போலீஸ் ஆர்டர்
சென்னை: சென்னையில் நவம்பர் 4ம் தேதி முதல் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன்படி சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில்தான் சென்னையில் வேக கட்டுப்பாட்டை காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் இதே போன்ற அறிவிப்பை காவல்துறை வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ. வேகத்தை மீறியும் இயக்கப்படும் வாகனங்கள் 'ஸ்பீட் ரேடார் கன்' மூலம் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தது. இதன் மூலம் விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றும் காவல்துறை விளக்கமளித்திருந்தது. இதற்காக சென்னையில் 10 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளும், 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்தவும் நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையாக வெடித்தது. சென்னையில் பிரதான சாலைகளை தவிர ஏராளமான சாலைகள் இன்னும் குண்டும், குழியுமாகத்தான் இருக்கிறது. இதை சரிசெய்தாலே பாதி விபத்துக்களை நடக்காமல் தவிர்க்கலாம். மட்டுமல்லாது பைக் வாங்குவதற்கான நோக்கமே அலுவலகத்திற்கோ, அல்லது அவசர தேவைக்கோ பயன்படுத்ததான். இப்படி இருக்கையில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற தலைவலியை ஏற்படுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியிருந்தனர்.
இப்படி இருக்கையில்தான் தற்போது இதே அறிவிப்பு நவம்பர் மாதம் 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என காவல்துறை கூறியுள்ளது. குறிப்பாக இருச்சக்கர வாகனங்களுக்கு 50 கி.மீ, மூன்று சக்கர வாகனங்களுக்கு 40 கி.மீ வேகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும். அதேபோல இலகு ரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் இயங்கலாம் என்று கூறியுள்ளது.
சென்னையில் மொத்தம் 277 சிக்னல்கள் இருக்கின்றன. இந்த பெருநகரத்தில் 62.5 லட்சம் வாகனங்கள் ஒரு நாளைக்கு பயணிக்கின்றன. ஒவ்வொரு சிக்னல்களிலும் சரியான வழிக்காட்டுதல்கள் இருந்த போதிலும், சிலர் இதை மீறுகின்றனர். வாகனத்தின் வேகத்தை குறைக்க அறிவிப்பு பலகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை முறையாக பின்பற்றினாலே விபத்துக்கள் நடப்பதை தவிர்க்க முடியும். ஆனால் இது பின்பற்றப்படாததால்தான் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவேதான் இந்த வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications