குடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி. எஸ்.ஆர் .பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டி:
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம்கள் என்ற வார்த்தை இடம்பெறாதது தவறுதான். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்க வேண்டும் என பாஜக நேரடியாக எந்த அழுத்தமும் தரவில்லை.

கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி
ஆனால் ஆதரிக்க வேண்டிய நெருக்கடி, பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு இருந்தது. குறிப்பாக மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு இந்த நெருக்கடி இருந்தது. இம்மசோதா குறித்து எங்கள் கட்சி அலுவலகத்தில் நாங்கள் விவாதித்து கொண்டிருந்தோம்.

ஆதரவு ஏன்?
அப்போது தலைமை செயலகத்தில் இருந்து துணை செயலாளர் என்னை போனில் அழைத்து மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து ராஜ்யசபாவில் மசோதாவை ஆதரித்து வாக்களித்தோம்.

இந்து ராஷ்டிராதான் குறிக்கோள்
இந்த மசோதா குறித்து எங்கள் கருத்துகளை ராஜ்யசபாவில் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். பாஜகவைப் பொறுத்தவரை இந்து ராஷ்டிரத்தை அமைப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதை வெளிப்படையாக சொல்லாமல் வேறு வேறு சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

அமித்ஷாவும் இந்து வாக்குகள்
அக்கட்சியைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக்க முயற்சிக்கிறது. பாஜக தலைவர்களில் குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த வியூகத்தை செயல்படுத்துகிறார்.

சிறிய அளவில் தாக்கம் இருக்கும்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்ததன் மூலம் அதிமுகவுக்கு மிகப் பெரிய பாதிப்பு இல்லை. நாங்கள் முஸ்லிம்களை எதிர்க்கவில்லை. ஆனால் நிச்சயம் சிறிய அளவில் தாக்கம் இருக்கவே செய்யும். இவ்வாறு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கூறினார்.












Click it and Unblock the Notifications