சில கரும்புள்ளிகளால் முதல்வருக்கு கெட்ட பெயர்.. உள்ளே தள்ளுங்க.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கோரிக்கை!
சென்னை : ராமர், சீதை, அனுமன் உள்ளிட்ட இந்து கடவுள்கள் குறித்து இழிவாகப் பேசிய உதவி இயக்குநர் விடுதலை சிகப்பியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கவிஞரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி, கடந்த 30ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்களை வைத்து தான் எழுதிய கவிதையை வாசித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. விடுதலை சிகப்பி, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசியதாக பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து எழுதப்பட்டதுதான் அந்தக் கவிதை, இந்துக் கடவுள்களை இழிவு செய்வது நோக்கமல்ல என பா.ரஞ்சித் உள்ளிட்டோர் விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜர் உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் இருந்து விடுதலை சிகப்பி கவிதை விவகாரம் தொடர்பாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் எனக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பற்றி அவதூறாக பேசினார்கள். அதன் பின் முருகப்பெருமான் குறித்து அவதூறாக பேசினார்கள். அவர்களை கைது செய்யவில்லை. இப்போது உலகமே போற்றி வணங்கும் ஶ்ரீ ராமர், சீதா தேவி, ஹனுமன் ஆகிய கடவுள்கள் குறித்து, விடுதலை சிகப்பி என்பவர் மிகவும் இழிவாகப் பேசி உள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும்.
இதுபோல இந்து மத கடவுள்களை குறி வைத்து சில கரும்புள்ளிகள் மிகவும் இழிவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தமிழக முதல்வருக்கு கெட்ட பெயர் உண்டாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலும் இந்து மத கடவுள்கள் குறித்து இழிவாக பேசுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications