கலகத் தலைவனை பாராட்டிய கழகத் தலைவர்! உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்! இன்று முதல் கொண்டாட்டம்!
சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
கழகத் தலைவரே படத்தை பார்த்து பாராட்டிவிட்டதால் கலகத் தலைவன் படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார்.
இதனிடையே நாளை அந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளதால் கொண்டாடி தீர்க்க தயாராக உள்ளனர் உதயநிதி ரசிகர் மன்றத்தினர்.

கலகத் தலைவன்
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதன் பிரிவியூ ஷோவை பார்த்த திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் உதயநிதி உட்பட ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

சமூக அக்கறை
கலகத் தலைவனை பொறுத்தவரை சமூக அக்கறை மிகுந்த படம் என்றும் நேர்த்தியான உருவாக்கம் எனவும் இயக்குநர் மகிழ் திருமேனியை மனதார பாராட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உற்சாகம் அடைந்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் இந்த திரைப்படமானது உலகம் முழுவதும் நாளை ரீலீஸ் ஆகிறது. இதனால் இப்படத்தின் ரிலீஸை கொண்டாடுவதற்காக உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கதைக்கு முக்கியத்துவம்
வருடத்துக்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்தாலும் கூட தனது படம் பேசப்படக் கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் மிகுந்த கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கண்ணே கலைமானே, மனிதன், நெஞ்சுக்கு நீதி, சைக்கோ, என வரிசையாக சமூக அக்கறை மிகுந்த கதைக்களத்தையே தேர்வு செய்து வருகிறார். இப்போதும் கூட மாமன்னன் திரைப்படத்தை அவ்வாறு தேர்வு செய்து தான் அதில் நடித்து வருகிறார்.

திரையரங்குகள்
திமுக இளைஞரணி நிர்வாகிகளும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் திரையரங்குகளில் உதயநிதி ஸ்டாலின் கட் அவுட்களையும், கலகத் தலைவன் திரைப்படம் வெற்றிபெற வேண்டி வாழ்த்துக் கூறி விளம்பரக் பதாகைகளையும் வைத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications