இப்தார் நோன்பு விழா எடுப்பது முக்கியமில்லை.. இஸ்லாமியர் பிரச்சனைகளுக்கு வாயை திறக்கனும்! - முதல்வர்
சென்னை: கொளத்தூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை திமுக சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நோன்பு விழா யார் வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால், பிரச்சனை என்று வந்தால் உடன் நிற்பது திமுகதான்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, "அடுத்த 5 ஆண்டுகளில் எல்லோருக்கும் எல்லாம் என்கிற இலக்கை எட்டும் வகையில் சமீபத்தில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டத்தொடருக்கு மத்தியில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சில நாட்களுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சிறுபான்மையினர் நலப் பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நோன்பு விழாவில் நான் பங்கேற்று இருந்தேன். அதைத்தொடர்ந்து இந்த விழாவில் நான் பங்கேற்கிறேன். கொளத்தூரில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விழா நடைபெற்று வருகிறது. பரிமாறிக்கொள்ள 2100 பேருக்கு ரமலான் பரிசுகளை வழங்கி அன்பை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சியாக இது நடைபெற்று வருகிறது.
யார் வேண்டுமானாலும் நோன்பு விழா நடத்துவாங்க. ஆனா, இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை நடக்கும் போது வாயை திறக்க மாட்டாங்க. குடியுரிமை திருத்த சட்டமாக இருந்தாலும் சரி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி, சிறுபான்மைக்கு எதிராக எது நடந்தாலும் இன்னைக்கு முதல் எதிர்ப்பு குரல் கொடுத்துக் கொண்டிருப்பது நம்முடைய திராவிட முன்னேற்றம் கழகம்தான். இப்ப கூட வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன்னாடி கூட, இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி நம் அரசுடைய நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்திருக்கிறோம். இந்த தீர்மானத்தை தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள்.
மறுபுறம் இரவோடு இரவாக திட்டம் தீட்டி விடியற்காலை யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு போனவர் தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. விமானம் மூலம் டெல்லிக்கு சென்று அவர் விமான நிலையத்தில் இறங்கி நான்கு கார்களில் மாறி மாறி சென்றிருக்கிறார். கொள்ளையடிக்க செல்வது போல சென்றிருக்கிறார். இத்தனை கார்கள் மாறிச் சென்று வக்ஃப் சட்டத்தைக் கொண்டு வர இருக்கும் அமைச்சரை சந்தித்திருக்கிறார் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இது இப்படி இருக்க, தமிழக அரசியலில் யார் இரண்டாம் இடத்தை பிடிப்பது என்று போட்டி உருவாகியிருக்கிறது. நேற்றுவரை ஆளும் கட்சியாக வருவோம் என்று சொல்லிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, இன்று நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று கூறியிருக்கிறார். இந்த பதில் யாருக்கானது என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நம்மை பொறுத்தவரை நாம்தான் ஆளும் கட்சி. இது மமதையில் சொல்வது கிடையாது. உண்மையை சொல்கிறேன்.












Click it and Unblock the Notifications