"இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்பது பாஜகவின் காவி மாடல்".. சாட்டையை வீசிய ஸ்டாலின்
சென்னை: "அனைவரும் படிக்க வேண்டும் என்று சொல்வது திராவிட மாடல். இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்பது பாஜகவின் காவி மாடல்." என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அதன் முதல் பிரதியை மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "அனைவரும் படிக்க வேண்டும் என்று சொல்வது திராவிட மாடல். இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்பது பாஜகவின் காவி மாடல். நம் உயர்வுக்கும், மேண்மைக்கும் அடித்தளமாக இருப்பது கல்விதான். அறிவுதான் நமது ஆயுதம். கல்விக்கு தடை போட நினைக்கும் பாஜகவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு போர் வாள் சுழற்றுகிறது. தேசியக் கல்விக்கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்துவிடும். இட ஒதுக்கீடு இருக்கும் வரைதான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கும்.
தேசியக் கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் வளர வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே சொல்லியுள்ளார். எது நடக்கும் என நாம் எச்சரித்தோமோ அதனை உள்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். இந்தியை தடுக்க ஒரே வழி கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதுதான். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாவிட்டால், கல்வி என்பது அனைவருக்கும் எட்டாக்கனி ஆகிவிடும். இது ஈராயிரம் ஆண்டு காலப் போர்.. இதை தடுக்க ஒரே வழி இதுதான்" என பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications