திமுக கூட்டணியில் ஓபிஎஸ்.. சட்டசபையில் உறுதி செய்த உசிலம்பட்டி எம்எல்ஏ.. வார்த்தையை கவனிச்சீங்களா
சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏவுமான ஐயப்பன் சட்டசபையில் இன்று பேசினார். சட்டசபையில் இன்று ஓ பன்னீர் செல்வம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில் அவர் இப்படி பேசியுள்ளார். இதனால் ஓ பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைவது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 16வது சட்டசபையின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வத்தின் அணியில் உள்ள உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் இன்று சட்டசபையில் பேசினார்.

அப்போது அவர், ‛‛வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முக ஸ்டாலின் வர வேண்டும் என்று எம்ஜிஆர் ஆசியோடும், ஜெயலலிதாவின் ஆசியோடும் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று அண்ணன் ஓபிஎஸ் வாழ்த்துகளோடு தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். இதனை கேட்டவுடன் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு சிரித்தனர். அதேபோல் சபையில் இருந்த அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் சிரித்தபடி மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
முன்னதாக இன்றைய தினம் ஓ பன்னீர் செல்வம் தனது மகன் முன்னாள் எம்பி ரவீந்திரநாத் உடன் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். வருகிற சட்டசபை தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் இன்னும் கூட்டணியை அறிவிக்காத நிலையில் இந்த சந்திப்பு நடந்தது. இதனால் அவர் திமுக கூட்டணியில் ஐக்கியமாகலாம் என்ற தகவல் வெளியான நிலையில் அவரது ஆதரவு எம்எல்ஏ உசிலபம்பட்டி ஐயப்பன் இப்படி பேசியுள்ளார். இதனால் திமுக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் இணைவது உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications