திமுக நகரச் செயலாளரை மாவட்ட பொறுப்பாளராக புரோமோஷன் செய்த ஸ்டாலின்! கனிமொழி எம்.பி. சிபாரிசு!
சென்னை: அதிமுகவில் மட்டுமே யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் வர முடியும் என்று பேசப்படும் நிலையில், திமுகவில் நகரச் செயலாளராக இருந்த ஒருவரை ஒரே இரவில் மாவட்ட பொறுப்பாளராக புரோமோஷன் வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர திமுக செயலாளராக இருந்த ஜெயபாலன் என்பவரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு நியமித்து அதனை துரைமுருகன் மூலம் அறிவிக்கவும் வைத்திருக்கிறார் ஸ்டாலின். ஜெயபாலனை மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்ததன் பின்னணியில் கனிமொழியின் கை ஓங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுரண்டை ஜெயபாலனை பொறுத்தவரை கனிமொழியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர். அவருக்காக கனிமொழி செய்த சிபாரிசை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதோடு, உதயநிதி ஸ்டாலினும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதற்கு காரணம் சிவபத்மநாதன் மீது தொடர்ச்சியாக எழுந்த புகார்களே ஆகும்.
சிவபத்மநாதன் மீதான நடவடிக்கையிலிருந்து காப்பாற்ற தென்காசி மாவட்ட திமுக பொறுப்பு அமைச்சராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கடுமையாக முயற்சித்திருக்கிறார். ஆனாலும் அதனை மீறி இந்த அதிரடி ஆக்ஷனை எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.இதன் மூலம் இனி அடுத்தடுத்த மாற்றங்களும் திமுகவில் அரங்கேறலாம் எனத் தெரிகிறது. இதனால் புகாருக்குள்ளான திமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதனிடையே தென்காசி மாவட்ட திமுகவை பொறுத்தவரை துரை, செல்லத்துரை, சிவபத்மநாதன், என மூன்று மாவட்டச் செயலாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அங்கு நிலவும் கோஷ்டிப்பூசல் தான்.












Click it and Unblock the Notifications