பொங்கல் அன்று கட்சியினருடனான சந்திப்பு சூசகமாக தவிர்ப்பு! நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் தந்த ஸ்டாலின்!
சென்னை: பொங்கல் அன்று எப்போதும் கட்சியினர் தன்னை சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும், இந்த முறை அவரவர் பகுதிகளிலேயே பொதுமக்கள் பங்கேற்புடன் சமத்துவ பொங்கல் விழா நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அசைன்மெண்ட் கொடுத்துள்ளார்.
அதேபோல் திமுகவினர் தங்கள் இல்லங்களில் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் வருமாறு;
''எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். ''
''கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் - மாடுபிடி வீரர்கள் என வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.''
''கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.''
''பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு! தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய ஒன்றிய அரசில் சமூகநீதி - சமதர்ம - மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம்.''
''தை பிறக்கிறது, இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ் பண்பாட்டின் அடையாளமாக சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.''












Click it and Unblock the Notifications