ஆளுநர் செயலால் அவசரமாக சீனியர்களை அழைத்த ஸ்டாலின்.. பிரஸ் மீட்டில் பொன்முடி பாய்ச்சல்! என்ன நடந்தது?
சென்னை: அமைச்சரவை இலாக்கா மாற்றம் குறித்த முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரை கடித்த்தை கவர்னர் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார். இதனையடுத்து அவசரமாக ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு வரும் ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற ஐகோர்ட் அனுமதி அளித்தது.

சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றன. செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால், அவரிடமிருக்கும் இரு முக்கியத் துறைகளை இரு வேறு அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்தார்.
அதன்படி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்து கடிதம் அனுப்பினார்.
ஆனால், இலாகா மாற்றம் தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்து, முதல்வரின் பரிந்துரை கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார். செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறப்பட்ட காரணம் தவறான தகவல் எனக் கூறி இலாகா மாற்றத்தை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது விவகாரம், இலாகா மாற்றம் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, "இன்று உடல்நலக்குறைவால் செந்தில் பாலாஜி வசமுள்ள இரு துறைகளை வேறு இரு அமைச்சர்களுக்கு மாற்றி அமைத்துள்ளோம் என முதலமைச்சர், ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்குவது முதலமைச்சரின் அதிகாரம். ஆளுநருக்கு அதை தெரிவிக்கவேண்டியது கடமை. அதன் அடிப்படையில் தெரிவித்தார்.
ஆனால், பாஜகவின் ஏஜெண்ட் ஆக உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை ஏற்காமல் திரும்பி அனுப்பியுள்ளார். தற்போது மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் இலாகா மாற்றம் குறித்த பரிந்துரை கடிதத்தை அனுப்பியுள்ளார். ஆளுநர் அதனை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், " ஜப்பானில் இருந்து சுற்றுப்பயணம் முடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பியதும், செந்தில் பாலாஜி மீதான வழக்கை குறிப்பிட்டு அவர் அமைச்சராக தொடரக்கூடாது என ஆளுநர் ரவி கடிதம் எழுதியிருந்தார். வழக்கு நிலுவையில் இருப்பதாலேயே அமைச்சரை பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை என முதல்வர் பதில் கடிதம் எழுதினார்.
தற்போது உள்ள மத்திய அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை நீக்கக்கோரி ஆளுநர் கடிதம் எழுதுவாரா?" எனச் சாடினார் பொன்முடி.












Click it and Unblock the Notifications