திமுக தேர்தல் வாக்குறுதிபடி.. சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்.. அவிழ்க்கப்பட்ட ஜெ. மரண மர்ம முடிச்சு
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் நீடித்து வந்த மர்மங்களை நாட்டு மக்கள் மத்தியில் புட்டு புட்டு வைத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
ஜெயலலிதாவுக்கு மட்டும் முறையாக சிகிச்சைகள் வழங்கியிருந்தால் காப்பற்றி இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருப்பது அண்ணா திமுக தொண்டர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளது திமுக அரசு.

ஊர் ஊராக பிரச்சாரம்
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வருவேன் என கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். அதுமட்டுமல்ல தேர்தல் வாக்குறுதியாகவும் இதனைத் தெரிவித்திருந்தார். சொல்லும் செயலும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கும் ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை அரசு சார்பில் செய்து கொடுத்தார்.

விசாரணை விறு விறு
இதனால் விசாரணை விறுவிறுப்படைந்து இறுதிகட்டத்தை அடைந்தன. அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையம் தானே என ஏனோ தானோ என்றில்லாமல் உரிய முக்கியத்துவம் வழங்கினார் ஸ்டாலின். இதனிடையே திமுக தேர்தல் வாக்குறுதியில் முக்கிய வாக்குறுதியை சத்தமில்லாமல் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஜெயலலிதாவுக்கு மட்டும் முறையாக சிகிச்சைகள் வழங்கியிருந்தால் காப்பற்றி இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருப்பது அதிமுகவினரை மட்டுமல்ல பொதுமக்களையும் உலுக்கியுள்ளது.

ஸ்டாலின் மீது நன்மதிப்பு
ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை உலகிற்கு தெரியப்படுத்தியதன் காரணமாக ஸ்டாலின் மீதும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் நன்மதிப்பு வைக்க ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக அரசு எங்கே விசாரிக்கப் போகிறது, ஆணையத்தை செயலிழக்கச் செய்துவிடும் என கற்பனைக் கண்டவர்கள் பலரும் ஸ்டாலினின் அதிரடியை கண்டு ஆடிப்போய் விட்டனர். அதிமுக ஆட்சியில் செய்யாத ஒன்றை திமுக ஆட்சியில் செய்துகாட்டி வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் ஸ்டாலின்.

சசிகலா ஆலோசனை
இதனிடையே தன் மீதான ஆறுமுகசாமி ஆணையத்தின் குற்றச்சாட்டு பற்றி முக்கிய வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வரும் சசிகலா, என்ன பதிலளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் சி.விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தை அடுத்து எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications