முதலமைச்சர் ஸ்டாலினை காக்க வைத்த கே.எஸ்.அழகிரி! பதற்றமான காமராஜர் அரங்கம்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கால் மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது.
காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்றவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த கக்கன் குறித்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முன்னோட்டத்தையும், பாடல்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதற்கான விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக குறித்த நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக அங்கு ஆஜராகிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் விழா மேடையில் கே.எஸ்.அழகிரி இல்லை. இதனால் காமராஜர் அரங்கமே பதற்றமானது. முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்வாரோ எனத் தெரியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் பரிதவித்தனர். ஒரு வேளை முதல்வர் புறப்பட்டுச் சென்றுவிடுவாரோ என அஞ்சினர்.
இதனிடையே காமராஜர் அரங்கத்தில் உள்ள அறையில் முதல்வரை வரவேற்று அமர வைத்து கே.எஸ்.அழகிரி வந்துகொண்டிருக்கும் தகவலை மெதுவாக எடுத்துச் சொன்னார் காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா. ஒரு வழியாக கே.எஸ்.அழகிரி லேட் என்ட்ரி கொடுத்து விழா மேடைக்கு வந்ததும் அவரை முதல்வர் அமர்ந்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார் கோபண்ணா.
கே.எஸ்.அழகிரியிடத்தில் சிறிதும் முகம் சுளிக்காமல் மிஸ்டர் கூலாக சிரித்த முகத்துடன் உடனடியாக விழா மேடைக்கு வந்து அமர்ந்தார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
மற்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருந்ததால் கக்கன் வரலாற்று திரைப்படத்தின் முன்னோட்ட குறுந்தகடை வெளியிட்டவுடன் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications