தொழில்முனைவோரெல்லாம் அதிர்ச்சியா இருக்காங்களாம்.. அப்பீல் போகப் போகுதாம் ஸ்டெர்லைட்!
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தொழில் முனைவோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்வோம் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடியில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்திய போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கடந்த 2018 மே 22 ஆம் தேதி பலியாகிவிட்டனர்.
இதையடுத்து மே 28 ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது. அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றமோ, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.
நீதிக்கு கிடைத்த வெற்றி.. ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு வைகோ, பாலகிருஷ்ணன் வரவேற்பு
அதன்படி வேதாந்தா நிறுவனம் ஆலையை திறக்க அனுமதி கோரி கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்று கூறி வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் கூறுகையில் ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்வோம். இந்த தீர்ப்பால் தொழில் முனைவோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்றார் பங்கஜ் குமார்.