மனசை உலுக்குது.. காசாவுக்காக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: காசாவில் நடந்த இனப்படுகொலை மனதை உலுக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் 26 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கூறியுள்ளார். இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்களும், திமுக கூட்டணி தொண்டர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டு கொடியுடன் கலந்துகொண்டர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். அப்போது காசா இனப்படுகொலையை உடனே நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ஸ்டாலின் பேசியதாவது:- காசாவில் நடந்த இனப்படுகொலை மனதை உலுக்குகிறது. உடனே இதை நிறுத்த வேண்டும். பாலஸ்தீனத்தில் 26 ஆயிரம் குழந்தைகள் அவர்களது பெற்றோரை இழந்துள்ளனர்.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். காசாவில் இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதலை கண்டித்தும், உடனே போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கும். என்றார்.












Click it and Unblock the Notifications