அதிமுக வலையில் விழுந்த தேமுதிக? வட தமிழ்நாட்டில் பலம்பெறும் கூட்டணி? திமுகவுக்கு சரியான சவால்?
சென்னை: அதிமுக கூட்டணி தேமுதிகவின் வருகையால் பலம் பெற்று உள்ளது. இதனால் திமுக கூட்டணிக்கு சில நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
மதில் மீது பூனையாக இருந்து வந்த தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், அதிமுக தேர்தல் பொறுப்பாளர் பெஞ்சமின் ஆகியோர் கூட்டாகச் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தேமுதிக கடைசி நேரம் வரை அதிமுக அணியில் இடம் கிடைக்குமா என்று காத்திருந்தது. ஆனால், அதன் கதவுகள் திறக்கப்படவில்லை.
இந்த முறை அப்படி இல்லை. அதிமுக தனது கதவை முதன்முதலாக தேமுதிகவுக்கு திறந்துள்ளது. அடுத்து பாமகவும் கட்டாயம் அதிமுக அணிக்கே வரும். அதில் மாற்றம் இருக்காது என்கிறார்கள்.
தேமுதிக 4 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுள்ளது. அதிமுக 3 வரை தர சம்மதம் தெரிவித்துவிட்டது. கூடுதலாக ஒரு ராஜ்ய சபா சீட் தேமுதிகவின் விருப்பமாக உள்ளது.
இன்றைய நிலையில் அதிமுக அணி நிர்மூலமாக உள்ளது. அதன் தோற்றத்தை ஊதிப் பெரிதாகக் காட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால், எடப்பாடி பழனிசாமி தனித்து விடப்படுவார். எனவே எதையாவது கொடுத்து தேமுதிகவை இழுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அக்கட்சிக்கு உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் கனவு மெகா கூட்டணி அமைப்பது. அப்படி என்றால் எஸ்டிபிஐ கட்சியை மட்டும் வைத்துக் கொண்டு மெகா கூட்டணி என பேனர் அடிக்க முடியாது. ஆக, சொன்னதைச் செய்து காட்டி விட்டார் எடப்பாடி.
அவர் சரியாகக் காய் நகர்த்தி தேமுதிகவை உள்ளே இழுத்துவிட்டார். 3 சீட்டு உறுதியான பிறகே இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கத்திரிக்காய் முற்றினால்தான் சந்தைக்கு வரும். அப்படிப் பார்த்தால் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இன்னும் எந்தத் தொகுதி என்பது மட்டும்தான் பேசி முடிவெடுக்க வேண்டி இருக்கும்.
அடுத்ததாக பாமகவும் அதிமுக அணிக்குள் வந்துவிட்டால் அந்த அணி வலுவாகிவிடும். திமுக அணியில் உள்ள விசிகவுக்கு இணையாகப் புரட்சி பாரதம் அதிமுகவுக்குள் வந்துவிட்டது. அடுத்து தேமுதிகவும் வந்துவிட்டது. பாமகவும் வந்துவிட்டால், வட தமிழ்நாடு முழுக்க வலுவான கூட்டணியாக அதிமுக மாறிவிடும். கிட்டத்தட்ட 40% வாக்குகள் உறுதியாகிவிடும்.

பாமக எந்தப் பகுதியில் எல்லாம் பலமாக உள்ளதோ அங்கு எல்லாம் தேமுதிகவும் அடுத்த நிலையில் உள்ளது. ஆக, இந்த இருவரின் வாக்குகள் ஒரே கூடைக்குள் விழுந்தால், அது திமுகவைக் கட்டாயம் பாதிக்கும்.
தேமுதிக மற்று அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது குறித்து சில தகவல்களை மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பகிர்ந்து கொள்ள முன்வந்தார்.
இந்தக் கூட்டணி முடிவு குறித்து ஷ்யாம், “ஒரு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால், அந்த அணி வெற்றி பெறும் என்ற பிம்பத்தை முதலில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு ஒரு முகம் கிடைக்கும். எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என மக்கள் நினைக்கிறார்களோ அந்த வாகனத்தில்தான் வாக்காளர்கள் ஏறுவார்கள்.
அதிமுகவுக்கு ஓட்டு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு என்ன ஓட்டு வங்கி இருக்கிறது என்று பார்க்கக் கூடாது. 1998இல் திமுக- தமாகா கூட்டணி சட்டசபையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெற்றது. அன்று பர்கூரில் ஜெயலலிதாவே வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதன்பின்னர் ஒன்றே முக்கால் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வந்தது. அன்றைக்குப் பெரிய வலிமையான கட்சி இல்லை பாஜக. அதைக் கூட்டணிக்குள் கொண்டுவந்தார் ஜெயலலிதா. மதிமுகவைக் கொண்டுவந்தார். பாமகவையும் கொண்டுவந்தார். சுப்பிரமணிய சாமி, வாழப்பாடி ராமமூர்த்தி எனப் பலரும் உள்ளே வந்தார்கள்.
வாழப்பாடிக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் என்ன வாக்கு வங்கி இருந்தது? ஆனாலும் கூட்டணியை வலிமையாகக் காட்ட இவர்கள் தேவைப்பட்டார்கள். இறுதியாக ஜெயலலிதாவின் கணக்கு சரியானது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றியும் பெற்றது.
40 தொகுதிகளில் 30 தொகுதிகளை அதிமுக அணி கைப்பற்றியது. அந்த நேரத்தில் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வெற்றிக்குக் கூடுதல் காரணமாக அமைந்தது.

அப்படித்தான் இப்போதும். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தேமுதிகவுக்கு கிடைக்கப் போகும் இலாபம் என்ன? அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தேமுதிகவுக்கு வரப்போகும் இலாபம் என்ன? இப்படித்தான் கணக்குப் போட்டிருப்பார்கள். அப்படிப் பார்த்தால் பாஜகவிடம் 10 தொகுதிகளைப் பெற்று ஒன்றில் கூட வெற்றி பெறாது போனால் தேமுதிகவுக்கு இலாபம் இல்லை.
அதே அதிமுகவிடம் 3 தொகுதிகளைப் பெற்று மூன்றிலும் வெற்றிபெற்றால் அது மிகப்பெரிய இலாபம். இதுதான் எளிமையான கணக்கு. அதை நோக்கித் தான் தேமுதிக நகர்ந்துள்ளது.

கமல்ஹாசன் திமுகவிடம் 3 தொகுதிகளைக் கேட்பதாகச் சொல்கிறார்கள். அங்கே தருவதற்கு இடம் இல்லை. அவர் அதிமுக பக்கம் வந்தால் தாராளமாக 3 சீட்டு அவருக்குக் கிடைக்கும்.
அதைப்போல் சீமான் தனித்துப் போட்டி என களம் இறங்கி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவருக்கும் தனித்து நிற்பதால் பலன் இல்லை என்பது தெரியும். வெற்றி பெறவாய்ப்பு இல்லாமல் போவதைவிட, வெற்றி முக்கியம். ஆகவே, கடைசி நேரத்தில் அவர் மோடியை வீழ்த்துவதுதான் குறிக்கோள் எனச் சொல்லி அதிமுக அணிக்கு வரலாம். அப்படி வந்தால் திமுக அணிக்கு சவாலாக அமையும். அதிமுக அணி அதிக பலம் பெறும்” என்கிறார்












Click it and Unblock the Notifications