சில்வர் பேப்பரில் உணவை பார்சல் செய்தால் ஹோட்டல்களின் உரிமம் ரத்து.. உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
சென்னை: சில்வர் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. இதுபோல உணவை பார்சல் செய்தால் ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கும் சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகளுக்கும் அவற்றை பார்சல் செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனுக்காகவே இந்த கட்டுப்பாடுகள் உள்ளன.

இருப்பினும், சில ஹோட்டல்கள் இந்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில்லை. அதைக் கண்காணித்து தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறை தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஷாக் வீடியோ: சமீபத்தில் அப்படி தான் ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட பார்சல் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. அதில் ஒருவர் அருகே உள்ள பிரியாணி கடைக்குச் சென்று பிரியாணியை பார்சல் வாங்கி வருகிறார். பார்சல் பிரியாணியைத் திறந்து பார்த்த போது அது சில்வர் கவரை வைத்துக் கட்டப்பட்டது அந்த வீடியோவில் இருக்கிறது. சில்வர் பேப்பருக்கு மேலே பிளாஸ்டிக் லேயர் இருக்கும்.. எனவே, அது சில்வர் பேப்பர் போலத் தெரிந்தாலும் பிளாஸ்டிக்கில் தான் சூடான உணவு படுகிறது.
நடவடிக்கை: பிளாஸ்டிக்கில் தரப்படும் சூடான உணவைச் சாப்பிடும் போது கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதை பயன்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதற்கிடையே இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறையும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள உணவு பாதுகாப்புத் துறை, இதுபோன்ற சம்பவம் எங்கு நடந்தாலும் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி பார்சல் உணவுகளை பிளாஸ்டிக், சில்வர் கவரில் கட்டி தரக்கூடாது என்ற விதி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள உணவு பாதுகாப்புத் துறை, இதுபோல உணவு வகைகளை பார்சல் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சீல் வைக்கப்படும்: இதுபோல பிளாஸ்டிக் அல்லது சில்வர் கவரை ஹோட்டல்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமமும் ரத்து செய்யப்பட்டு ஹோட்டலுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. எனவே, இதுபோல செய்யாமல் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பார்சல் உணவுகளை விற்பனை செய்யுமாறு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications