ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும்.. பொள்ளாச்சி வழக்கில் கடும் நடவடிக்கை... உதயநிதி உறுதி
சென்னை: தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலுள்ள புதுப்பேட்டையில் பொது மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

ஸ்டாலினுடைய வெற்றி
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "இங்கு எனக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி. எனது வெற்றிக்காகத் தேர்தல் பணிகளைச் செய்த தொண்டர்களுக்கும் நன்றி. இந்த வெற்றி என்பது கருணாநிதிக்கான வெற்றி, தலைவர் ஸ்டாலினுடைய வெற்றி.

அடுத்து அமைச்சர்?
இங்கு தொகுதி மக்கள் என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். வரும் 7ஆம் தேதி முதல் தொகுதிகளுக்குத் தேவையானதைச் செய்யத் தொடங்கிவிடுவேன். அதை நீங்களே பார்ப்பீர்கள்" என்றார். மேலும், ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா என்று கேட்ட கேள்விக்கு, வரும் 7ஆம் இதற்கான பதில் கிடைத்துவிடும் பொறுத்திருங்கள் எனச் சூசகமாகப் பதிலளித்தார்.

பொள்ளாச்சி வழக்கு
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். பொள்ளாச்சியில் பல பெண்களிடம் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரி ராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ விசாரணை
மேலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கிலும் 'பார்' நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு வழக்குகளை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். பின்னர், இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications