ராஜ்பவனை விட்டு வெளியே போ.. ஆளுநர் ரவிக்கு எதிராக கோஷம்.. மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தாமதப்படுத்துவதை கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகை அருகே உள்ள சின்னமலை சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திமுகவின் மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு மாணவர் சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநரை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், தேசிய கல்விக்கொள்கையை ஆளுநர் திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வேந்தர் பட்டம் ஆளுநர் ரவிக்கு ஒரு கேடா? மாணவர்களை வஞ்சிக்கும் ஆளுநர் ராஜ்பவனை விட்டே வெளியேற வேண்டும் என திமுக மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கோஷமிட, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றவர்களும் முழக்கமிட்டனர்.
தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறும் போது, அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தமிழகத்தில் உள்ள அறிஞர்களைத் தவிர்த்து, வட இந்திய சனாதன சித்தாந்தவாதிகளை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்த விருப்பம் கொண்டுள்ளார். இதனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறாமல் 9,29,142 மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்காமல் உள்ளது.
பட்டப்படிப்பு சான்றிதழ் பெற முடியாததால், உயர்கல்வி பயிலவும் மற்றும் வேலைவாய்ப்பு பெறமுடியாமலும், ஆராய்ச்சி மேற்படிப்பு பயிலவும் முடியாமல் மாணவர்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் உயர்கல்வி பயின்ற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காமல் கடமைத் தவறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
உடனடியாக பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு விளம்பரத் தூதுவராகச் செயல்படுவதுடன், பல்கலைக்கழகங்களின் சுயாட்சி தன்மையை முடக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சின்னமலை சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications