"பதுங்குறீங்களே".. நிதியமைச்சர் "அதை" பற்றி பட்ஜெட்டில் மூச்சு விடலயே.. வெடியை வீசிய சு. வெங்கடேசன்
எம்பி சு வெங்கடேசன் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் தொடர்பாக சந்தேகம் கிளப்பி உள்ளார்
சென்னை: தேர்தல் நெருங்குவதன் அச்சம் காரணமாக, "பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம்" தொடர்பான அறிவிப்புகள் குறித்து பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் மூச்சு விடவில்லை என்று சாடியிருக்கிறார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.
நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.. இதையடுத்து, அந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
"மக்கள் தேவையை பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. செலவினங்களை குறைத்து வரிகளை அதிகரித்துள்ள இந்த பட்ஜெட், பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கும்" என்று பரவலான கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
Replacing old political vehicle.. சாரி சாரி! நிர்மலா சீதாராமனின் டங் ஸ்லிப் ஆனதால் அவையில் சிரிப்பலை
பாராமுகம்
அதேபோல, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் விவகாரம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.நாட்டை தொழில்மயமாக்கவும், தற்சார்புடைய நாடாக நிலை நிறுத்துவதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.. ஆனால், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. மத்தியில் ஆளும் பாஜக அரசு, தனியார் நிறுவனங்களை ஊட்டி வளர்ப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்களிடம் பாராமுகமாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
மெனக்கெடல்
மத்திய அரசின் மிகப்பெரிய தனியார்மயமாக்கல் நடவடிக்கையால் அரசின் விலை மதிப்பற்ற சொத்துக்கள், பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவே வழிவகுக்கும் என்கிறார்கள்.. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனை அள்ளி வழங்கும் அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மெனக்கிடுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதேசமயம், பொதுத்துறை நிறுவனங்கள் அதிகளவில் தனியார் மயமாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த பட்ஜெட்டில் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் செய்யப்பட இருப்பதாக அறிவித்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
பதுங்குவது எதுக்கு?
ஆனால் அதுகுறித்து நேற்றைய பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.. பாஜக அரசின் முன்னெடுப்பில் உள்ள பல தனியார்மய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் கவனத்தோடு தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கு காரணம், எதிர்வரும் நடப்பாண்டின் 9 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வரும் எம்பி தேர்தல்தான் என்றும், அதற்காகவே, நிதியமைச்சரின் தனியார்மய அறிவிப்புகளை தவிர்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
மூச்சுவிடல
அதை எடுத்துக்காட்டும் வகையில்தான், மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "பதுங்குவது தேர்தலுக்காகவா? இரண்டு வங்கிகளை தனியார் மயம் ஆக்குவோம் என்று போன பட்ஜெட்டில் பேசிய நிதியமைச்சர், இந்த பட்ஜெட்டில் மூச்சு விடவில்லை. காரணம், தேர்தல் என்கிறது ஊடகங்கள். மக்கள் ஏமாறட்டும், காத்திருங்கள் என்று கார்ப்பரேட்டுகளுக்கு தரும் வாய்ப்பா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் வெங்கடேசன்.