சென்னை வானிலை ஆய்வு மையத்தில் ரேடார் செயல்படாத பேரவலம்- சு.வெங்கடேசன் எம்.பி. விளாசல்
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை வானிலை மையத்தில் ரேடார் செயல்படாத அவலத்தில் இருப்பதாக லோக்சபா எம்.பி. வெங்கடேசன் சுட்டிக்காட்டி உள்ளார். தற்போதைய சூழலில் ரேடாரை விரைவில் பழுதுபார்க்க வேண்டும் என்றும் வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கிறது. சென்னை நகரில் 45 நிமிடங்களில் 6 செ.மீ, 1 மணிநேரத்தில் 7 செ.மீ மழை என மேகவெடிப்பை போல பெருமழை கொட்டியது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சென்னை வானிலை ஆய்வு மையம், திடீரென வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் இது கணிக்க முடியாமல் போனது என்றது. தற்போது சென்னையில் அமைக்கப்பட்ட ரேடார் இயங்காமல் பழுதடைந்தே இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை
இது தொடர்பாக லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு மழை அதிகமாக கிடைப்பது வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் என எல்லோரும் அறிந்ததே. குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக புயல்களின் தன்மை, மழையை அவதானிப்பது என எல்லாமும் காலநிலை மாற்றத்தால் கடினமாகி வருகிறது.

சென்னை ரேடார்
எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு நாம் தயாராக இருப்பது பேரிடர் காலங்களில் அறிவுப்பூர்மானது. கனமழை குறித்த முன்னறிவிப்புகளை மேற்கொள்ள உதவும் சென்னை துறைமுகம் அருகேயுள்ள உள்ள Doppler Weather Radar 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து பழுது
தொடர்ந்து பலமுறை பழுதாகியுள்ள இந்த ரேடார் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் கூட வேலை செய்யாமல் உள்ளது. இதனை சரி செய்வதில் கூட அலட்சியம் ; இப்போதுதான் உதிரி பாகங்களுக்கான பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளமுடிகிறது. இதில் ஒன்றிய அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ரேடார் செயல்படுவதை உறுதிபடுத்த கோருகிறேன்.
Recommended Video

புதிய ரேடாரை நிறுவுக
பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் உடனடியாக புதிய ரேடார் ஒன்றை சென்னையில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய @moes செயலாளர் கடந்த ஆண்டே புதிய ரேடார் சென்னையில் பொறுத்தப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை புதிய ரேடார் அமைக்கப்படவில்லை. இது 8 கோடி தமிழ்மக்களின் வாழ்வியலோடு சம்மந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications