"பாரத்" பெயர் மாற்ற 14 ஆயிரம் கோடி செலவு = 30 ஆண்டு காலை உணவு திட்ட செலவு! மதுரை எம்பி சுளீர் போஸ்ட்
சென்னை: பாரத் என பெயர் மாற்ற ரூ 14 ஆயிரம் கோடி ஆகும். இந்த தொகையானது தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு காலை உணவு திட்டத்திற்கு மேற்கொள்ளும் செலவிற்கு சமம் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் சாசனத்தின் முதல் வரியான "இந்தியாவின் மக்களாகிய நாங்கள்" ( We, the people of India) மீதே பா.ஜ.கவின் தாக்குதல்.

இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகக் கூடிய ரூ 14000 கோடி, தமிழ்நாட்டின் 17 லட்சம் 1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம். இவ்வாறு சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பாரத் என பெயர் மாற்ற உத்தேசமாக ஆகும் செலவு குறித்து ஒரு விளக்கப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் 2023 நிதியாண்டில் இந்தியாவின் வருமானம் ரூ 23.84 கோடியாகும். இந்த தொகையுடன் மார்கெட்டிங் பட்ஜெட் 0.06 என்பதை பெருக்கினால் ரூ 14,304 கோடி வருகிறது என குறிப்பிட்டுள்ளார். இது டெரன் ஆலிவர் பார்முலா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி என்ன?: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியது. இந்த நிலையில் இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 9, 10 ஆம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டின்னரை அளிக்கிறார். இதற்கு அவர் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பிதழ்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வரும் அறிவிப்புகள், இது போன்ற அழைப்பிதழ்களில் இந்திய குடியரசுத் தலைவர் அதாவது President of India என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ஜி20 மாநாட்டுக்கான அழைப்பிதழில் President of Bharat என வெளியாகியுள்ளது. வரும் 18ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்தியா என்ற சொல் பாஜகவிற்கு கசக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். மேலும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், தங்கள் பொறுப்புக்கு பக்கத்தில் பாரத் என சமூகவலைதளங்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர். அது போல் பிரதமரின் நிகழ்ச்சியிலும் பாரத பிரதமர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுகுறித்து மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், இந்தியாவை பாரத் என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என்றார். தற்போது சனாதனம், பாரத் ஆகிய இரு பிரச்சினைகளும் பெரும் விவாத்திற்குள்ளாகியுள்ளன.












Click it and Unblock the Notifications