4 தொகுதிக்கு இறங்கி வந்தும் இழுபறியில் தேமுதிக.. அதிமுகவை விட்டு விலகிவிடுமா?
Recommended Video

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் 8 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி கேட்டு கிடைக்காத நிலையில் 4 +1-க்கு ஒப்புக் கொண்ட நிலையில் தேமுதிக- அதிமுக கூட்டணி இறுதியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.
அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்றைய தினம் அதிமுக- பாமக- பாஜக கூட்டணி உறுதியானதால் தேமுதிக கூட்டணியும் இறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பியூஷ் கோயல்
இதையடுத்து விஜயகாந்த்தை பார்க்க அவரது வீட்டுக்கு தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அங்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் உடல்நலம் விசாரிக்க மட்டுமே வந்தோம் என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

விஜயகாந்த் கறார்
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தேமுதிகவுக்கு 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதை விட ஒரு தொகுதி கூடுதலாக ஒதுக்க வேண்டும் என விஜயகாந்த் கறாராக தெரிவித்துவிட்டார் என தெரிவித்தன.

தங்கமணி
இந்த நிலையில் இன்றைய தினம் தேமுதிக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணியுடன் போனில் பேசினார்.

படுதோல்வி
பின்னர் டெல்லியில் உள்ள பியூஷ் கோயலிடமும் அவர் போனில் பேசியுள்ளார். இதையடுத்து முக்கியமான நபரை சந்திக்க மயிலாப்பூர் நோக்கி சுதீஷ் விரைந்ததாக தகவல்கள் கூறியுள்ளன. கடந்த முறை தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட அத்தனை தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.

இறங்கி வந்த தேமுதிக
மேலும் விஜயகாந்துக்கு உடல்நலம் சரியில்லாததால் அவரால் பிரசாரம் செய்ய முடியாது. இதை கருத்தில் கொண்டே அதிமுக, தேமுதிகவுக்கு அவர்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 4 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி பெற தேமுதிக தயாராக இருக்கிறது.

என்ன நடக்கும்
ஆனால் தேமுதிகவோ தங்களுக்கு கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை கேட்கிறது. இதே தொகுதிகளை பாமகவும் கேட்டுள்ளது. இதனால் இழுபறி நீடிக்கிறது. எனவே தேமுதிக அதிமுக கூட்டணியில் இணையாமல் வேறு கூட்டணிக்கு செல்லுமா, இல்லை அதிமுக- பாமக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications