பெற்றோரின் அஜாக்கிரதையால் சுர்ஜித் மரணம்.. அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
சென்னை: சிறுவன் சுஜித்தின் மரணம் அவரது பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்துவிட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை, பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலா மேரி தம்பதியின் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
தொடர்ந்து மீட்புப் பணிகளில், அரசு எந்திரம் முழுக்க முடுக்கி விடப்பட்டாலும் கூட, அக்டோபர் 29ஆம் தேதி சடலமான நிலையில் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம், தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நிருபர்களை சந்தித்தார் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அப்போது அவர் கூறியதாவது: சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல்களைப் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும், அதிமுக 100% வெற்றி பெறும்.
உள்ளாட்சி தேர்தல் விரைவாக நடைபெறும். இந்த விஷயத்தில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். சினிமா சிறப்பு காட்சி இனிமேல் ஒழுங்குமுறை படுத்தப்படும்.
"நான் சுஜித் பேசுகிறேன்.. 80 மணி நேரம் மரணத்துடன் போராடியது கொடூரமானது"
மேலும், சுர்ஜித் மரணம் பொது இடத்தில் நடைபெற்ற விபத்து கிடையாது. தனியாருக்கு சொந்தமான இடத்தில், பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்துவிட்டது. இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுர்ஜித்தின் பெற்றோருக்கு, தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.