சூலூர் தொகுதி காலியானது… தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம்
Recommended Video
சென்னை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ், சுல்தான்பேட்டையை அடுத்த வதம்பசேரியில் தனது தோட்டத்து வீட்டில் நேற்று காலையில் நாளிதழ் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில், சூலூர் தொகுதி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் எண்ணிக்கை 21ல் இருந்து 22 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உள்பட 21 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. இதில், 3 தொகுதிகளுக்கு வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
18 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதே போல், ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றுள்ளார்.
இந்தநிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.