கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் போக பிளான் போட்டு இருக்கீங்களா? ரயில் பயணிகள் உடனே இதை செய்யுங்க
சென்னை: கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுபவர்கள் ரயில்களில் தற்போதே முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். டிக்கெட்டுகளை 60 நாட்கள் முன்பே புக் செய்யும் வசதி இருப்பதால் ஏப்ரல் 4 ஆம் தேதி வரையில் இன்று டிக்கெட் போட முடியும். கோடை விடுமுறைக்காக பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு இருப்பதால் டிக்கெட்டுகள் வேகமாக காலியாகி வருகின்றன.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் வெளியூர் மக்கள் தான். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கியுள்ள மக்கள், விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

தனியார் ஆம்னி பஸ்களில் நெருக்கடியான நாட்களில் விமானத்திற்கு நிகராக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால், பயணிகள் ரயில்களைத்தான் நாட வேண்டியுள்ளது. ரயில்களிலும் முன்பதிவு தொடங்கிய உடன் டிக்கெட்டுகள் விற்று காலியாகிவிடுகிறது. ரயில்களில் இரண்டு மாதத்திற்கு முன்பு டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி உள்ளது. இதனால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு புக்கிங் செய்து கொள்கிறார்கள்.
அந்த வகையில், வரும் ஏப்ரல்- மே மாத கோடை விடுமுறைக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந் தேதி முடிவடைகிறது. இதேபோல 11 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 5-ந் தேதி தொடங்கி 27-ந் தேதியும், 12-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி 25-ந் தேதியும் முடிவடைகிறது. பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால், கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று பொழுதை கழிக்க மக்கள் பலரும் திட்டமிடுவார்கள்.
குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும்பாலும், ரயிலில் செல்லவே விரும்புவார்கள். ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் குறைவு என்பதும், டாய்லட் போன்ற வசதியும் இருப்பதால் பயணிகள் ரயிலில் செல்லவே விரும்புகிறார்கள். அந்த வகையில், கோடை விடுமுறையில் பயணம் மேற்கொள்வதற்காக ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டவர்கள் நேற்று முதலே முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இதனால், டிக்கெட்டுகள் மளமளவென காலியாகி வருகிறது. அதிலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக காலியாகி வருகிறது. கன்னியாகுமரி, பொதிகை, நெல்லை, முத்துநகர் மற்றும் குருவாயூர் உள்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதி பெட்டி மற்றும் ஏசி வகுப்பு பெட்டிகளில் குறைவான டிக்கெட்டுகளே உள்ளன. எனவே சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் விரைவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் டிக்கெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி வரை பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்யலாம். தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 4 ஆம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 34 டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 78 டிக்கெட்டுகளும், முத்து நகர் எக்ஸ்பிரஸில் 171 டிக்கெட்டுகளும் உள்ளன. இந்த டிக்கெட்டுகளும் வேகமாக காலியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications