பிடிஆர் பற்றி கேள்வி கேட்டதுமே சட்டென முகம் மாறிய சுந்தர்.சி.. கொடுத்த ரிப்ளைய பாருங்க!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சுந்தர்.சி இன்று வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார். அப்போது, திமுக வேட்பாளர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றிய கேள்விக்கு சட்டென முகம் மாறி பதில் அளித்துள்ளார் சுந்தர் சி.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கானவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,59,093 பேர் முதல் முறை வாக்காளர்கள். மொத்தம் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் 33,133 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் காவலர்கள், 300 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்களது வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கிய 6 மணி நேரத்தில் 56.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடும் மதுரை மத்திய தொகுதி மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ஸ்டார் தொகுதியாக உள்ளது. மதுரை மத்தியில் திமுக சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, தவெக சாா்பில் மதார் பதூருதின் என்ற முஸ்தபா, நாம் தமிழா் கட்சி சார்பில் கா. அப்துல் ஹக்கீம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த நடிகரி குஷ்பூ பின்னர் பாஜக மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி முதல் முறையாக புதிய நீதிக் கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். மதுரை மத்தியில் பிரச்சாரத்தின்போது குஷ்பு, சுந்தர் சிக்கும் பிடிஆருக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்தது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான இன்று நடிகையும், பாஜக மாநில துணை தலைவருமான குஷ்பூ மற்றும் அவரது கணவரும், மதுரை மத்திய தொகுதி அதிமுக வேட்பாளர் சுந்தர்.சி தங்களது மகள்களுடன் வாக்களித்தனர். சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தனர். வாக்களித்த பிறகு நடிகை குஷ்பூ செய்தியாளர்களிடம் கையில் மை வைத்ததை காட்டினார். அதிமுக வேட்பாளரான சுந்தர்.சி பச்சை நிற உடையுடன் வந்து வாக்களித்தார்.
சென்னையில் வாக்களித்த பிறகு உடனடியாக மதுரைக்குச் சென்றார் சுந்தர் சி. மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பதிவைப் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தர்.சி, "மக்கள் உற்சாகத்தோடு வந்து வாக்களித்து வருகின்றனர்." என்றார்.
மதுரையில் இன்று வாக்களிப்பதற்காக வந்த போது கையில் மல்லிப்பூ சரத்தை சுற்றியபடி வந்தார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். "எப்போதும் இப்படி வரமாட்டீர்களே.. எதனால் இந்த கெட்டப்?" என செய்தியாளர்கள் கேட்ட போது, "மதுரக்காரன்" என்று சொல்லி கையை உயர்த்தி காட்டினார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
பிடிஆர் தனது கையில் மல்லிப்பூ சுற்றி வந்தது குறித்து சுந்தர் சி-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "இப்போது மக்கள் மன்றத்துக்கு வந்தாச்சு. இதன்பிறகு நான் எதுவும் பேச தயாரில்லை. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மீது நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications