விஜய்யை, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கூடாது.. ஆளுநருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கடிதம்
சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்காமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழக முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தவெகவுக்கு கூடுதலாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு தற்போது காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். இந்தச் சூழலில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர், தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு இதுதொடர்பாக இன்று கடிதம் அனுப்பி உள்ளார். அதில், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
அதே நேரம் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும் 118 எம்.எல்.ஏ-க்களை அவரது கட்சி பெறவில்லை. நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால், ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் தமிழக வெற்றி கழகத்திற்கு 107 இடங்கள் மட்டுமே உள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

'எனவே அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 11 உறுப்பினர்களின் எண்ணிக்கை அவருக்கு தேவைப்படுகிறது. அரசியல் சாசன கொள்கைகளை உறுதி செய்யும் வகையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்காமல், விஜய்க்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது' என்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை கேட்டுக் கொண்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு நாளை ஆளுநர் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்காமல் விஜய்க்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications