மெல்ல தலையை நீட்டிய விஜய்.. ”நீதி வெல்லும்” என்று திடீர் ட்வீட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ரியாக்ஷனாம்
சென்னை: "நீதி வெல்லும்" என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் விஜய் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமை மக்களை சந்தித்து வந்தார். இதில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த மக்கள் சந்திப்பின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர் சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கரூர் கூட்ட நெரிசல்
தமிழக அரசு சார்பில் உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இதன்படி விசாரணை தொடங்கி நடந்து வந்தது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
அதன்பேரில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று 8-வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முக்கியமான பல ஆதாரங்களை திரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே தவெகவினர் சிபிஐ விசாரணைக்கு கோரியிருந்தனர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
இதையடுத்து தான் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி விசாரணைக்கு தடை கோரி தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடந்தது. தொடர்ந்து தீர்ப்பானது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
கரூர் துயர் சம்பவம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்ஐடி விசாரணைக்கு தடை விதித்தது. இதேபோல் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையமும் விசாரணை நடத்த தடை விதித்தது. நியாயமான பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்றும், அதுதான் மக்களுக்கான நீதி என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
விஜய் ட்வீட் பதிவு
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவித்துள்ளது. தவெகவுக்கு சாதகமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "நீதி வெல்லும்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த பிறகு, 3 மணி நேரம் கழித்து விஜய் முதலில் ட்வீட் போட்டிருந்தார். அதன்பிறகு நான்கு நாட்களுக்கு பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டு விஜய் கரூர் சம்பவம் பற்றி வாய் திறந்திருந்தார். அதன்பிற்கு பெரிதாக வெளியில் வராத விஜய், இன்று உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்த பிறகு நீதி வெல்லும் என்ற ஒரே வார்த்தையில் ட்வீட் பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications