பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் இருக்கும் சிக்கல் தீருமா? சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 3ல் விசாரணை!
சென்னை: மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர் நல்லத்தம்பி தொடர்ந்த வழக்கு ஜூலை 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி காலமானார். தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை பணியாற்றிய கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்திலேயே கருணாநிதி நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 2.23 ஏக்கர் பரப்பளவில் இந்த நினைவிடம் கட்டப்படுகிறது.
கருணாநிதியின் எழுத்துப் பணிகளைப் போற்றும் வகையில் மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயர கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. கண்ணாடி பாலம் வழியாக கடலில் நடந்து சென்று கருணாநிதி பேனா சின்னத்தை பார்வையிடும் வகையில் இது அமைக்கப்பட உள்ளது.

இதற்கு அனுமதி பெற கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், இடர் மதிப்பீடு மற்றும் பேரிடர் மேலாண்மை திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில், பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் நல்லதம்பி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். மீனவர் நல்லதம்பி தாக்கல் செய்த மனுவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை அறியாமல் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக மீனவர்களின் கருத்தை அறியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மிக பிரம்மாண்டமான பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் வைப்பது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். இந்த சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதால் கடல் வளமும் பாதிப்படையும். இதையெல்லாம் அறிந்தே மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தடையின்றி அனுமதி வழங்கியுள்ளனர்.
பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல சூழலியலாளர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு அதை கருத்தில் கொள்ளவில்லை. சென்னை மாநகரில் நினைவு சின்னங்கள் அமைக்க பல்வேறு இடங்கள் இருக்கும்போது மெரினா கடற்கரை மற்றும் மெரினா கடலை அரசு இயந்திரங்கள் தேர்வு செய்வது என்பது இயற்கை சூழலுக்கு எதிரானது.
இதனால் கடல் வளமும், கடல் சூழலும் பாதிக்கப்பட்டு அதனால் மீனவர்களும் கடுமையாக பாதிப்படைய நேரிடும். இந்த பேனா நினைவு சின்னத்தால் கடலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள 32 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும். ஏற்கெனவே உலகின் மிகநீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையை அரசியல் கட்சியினர் கல்லறைத் தோட்டமாக மாற்றி வரும் நிலையில், பேனா நினைவு சின்னத்தை மெரினா கடலில் அமைக்க தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜூலை 3ஆம் தேதி, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சிக்கல் ஏற்படுமா? தடைக்கற்கள் நீங்குமா என்பது அன்றைய விசாரணையில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications