பணால் ஆன ரெட்ரோ.. சூர்யாவின் 16 வருட ஃபிளாப் பயணம்! இதுக்கெல்லாம் ‘அது’ தான் காரணம்! விளாசிய பிரபலம்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு தரப்பு படம் அருமையாக இருப்பதாகவும் மற்றொரு தரப்பு சரி இல்லை என விமர்சித்து வருகிறது, இந்த நிலையில் 16 வருடமாக சூர்யாவின் ஃபிளாப் பயணம் தொடர்கிறது எனவும், மாறுபட்ட நம்பகத்தன்மை கொண்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க சூர்யா தயாராக வேண்டும் என கூறி இருக்கிறார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல தமிழ் சினிமாவின் நீண்ட காலமான நம்பிக்கை கூறிய சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர் என்றால் அது சூர்யா தான்.
பிதாமகன், காக்க காக்க போன்ற வித்தியாசமான கதை களங்களில் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்த அவர் கடந்த சில வருடங்களாகவே தடுமாறி வருவதாக கூறப்படுகிறது. ஜெய்பீம், சூரறைப் போற்று போன்ற ஓடிடியில் ரிலீசான படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தாலும் நேரடியாக திரையரங்குகளில் வெளியான பல படங்கள் சொதப்பியது.

அஞ்சான், என்ஜிகே, ரத்த சரித்திரம், என்ன பல படங்கள் ரசிகர்களை சோதித்தது. சிங்கம் படத்துக்கு பிறகு வெளியான தியேட்டர் ரிலீஸ் படங்கள் அனைத்துமே தோல்வி தான். கடைசியாக வெளியான கங்குவா படம் ஆஸ்கார் அவார்டு வரை செல்லும் என பலரும் பெருமை பேசிய நிலையில் கடும் எதிர்வினைகளை சந்தித்தது. தனது கணவரை குறிவைத்து தாக்குவதாக ஜோதிகா அறிக்கை வெளியிடும் அளவுக்கு அந்த படத்தின் விமர்சனங்கள் இருந்தது. இந்த நிலையில் இறைவி, பீட்சா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் உடன் சூர்யா இணைந்தார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருந்தன. சந்தோஷ் நாராயணன் இசையில் கனிமா பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த ஒன்றாம் தேதி வெளியானது. அதே நேரத்தில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. ஒரு தரப்பு படம் சூப்பராக இருக்கிறது என்றும், ஒரு தரப்பு படம் நல்லாவே இல்லை என விமர்சிக்கின்றனர்.
அதே நேரத்தில் நான்கு நாட்களில் இந்த படம் 80 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரெட்ரோ படம் பிளாப் தான் எனவும், மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து சூர்யா நடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"16 வருடங்களாக தொடர் தோல்விகளை தந்து வரும் சூர்யா, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக சூர்யா தந்த கடைசி தியேட்டரிக்கல் ஹிட் படம் சிங்கம் (2009). அதன்பிறகு இன்றுவரை சரியான கதையை தேர்வு செய்ய தெரியாமல் தோற்று வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தராமல் இருப்பதே. ஏற்கனவே ஜெயித்த இயக்குனர்கள் மீது சவாரி செய்தால் வெற்றி உறுதி என நம்புகிறார். ஆனால் அவர்கள் சொல்லி வைத்தாற்போல் இவருக்கு மட்டும் விபூதி அடித்து விடுகிறார்கள். ஜிகர்தண்டா Double X எனும் ஓடாத படத்திற்கு சக்ஸஸ் மீட் கொண்டாடி ஏமாற்றினார்கள். அதை நம்பி கார்த்திக் சுப்பராஜூக்கு வாய்ப்பு தந்தார். விளைவு..ரெட்ரோ பணால் ஆகிவிட்டது.
சிங்கத்திற்கு பிறகு ஒரே ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கூட தரமுடியாமல் 16 வருட ஃப்ளாப் பயணம் தொடர்கிறது. அடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் மாசானி அம்மன் கதை இவருக்கு கைகொடுக்குமா என தெரியவில்லை. தமிழ் ரசிகர்கள் உஷாராக இருப்பதை மிகத்தாமதமாக உணர்ந்த சூர்யா அடுத்ததாக.. வெங்கடேஷ் அட்லூரி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அது என்ன ஆகுமோ.. இனியாவது உருப்படியான கதைகளை தேர்வு செய்ய வேண்டும். புதிய இயக்குனர்களை நம்ப வேண்டும்.
பழைய டபரா செட்டுகளை மட்டுமே நம்பினால்.. விபூதி அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள். திரையில் இவரை பார்க்கும்போது கதாபாத்திரமாக தெரியாமல்.. சூர்யாவாக மட்டுமே தெரிவது பெரிய மைனஸ். இந்த செயற்கை தனத்தையும் சரி செய்ய வேண்டும். பிதாமகன், காக்க காக்க போன்று நம்பகத்தன்மை கொண்ட மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்ய வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications