புரியாத புதிராக இருக்கு.. முன்கூட்டியே வழக்கை விசாரிப்பது குறித்து புகழேந்தி கொடுத்த ரியாக்ஷன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பதவி குறித்த நீதிமன்ற தீர்ப்பு புரியாத புதிராக இருக்கிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை: பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கை முன் கூட்டியே விசாரிப்பதாக சொல்லியிருக்கும் நீதிமன்ற தீர்ப்பு புரியாத புதிராக இருக்கிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பொதுக்குழுவை எதிர்த்த ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

பொதுச்செயலாளர் தேர்தல்
இதற்கு மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை அக்கட்சி தலைமை வெளியிட்டது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு நேற்று இன்றும் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 200 க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுவை வாங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு ஆவதற்கான வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

தேர்தல் நடத்த தடையில்லை
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அவசர வழக்காக நீதிபதி கே. குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும் தேர்தல் நடத்த தடையில்லை என்றும் உத்தரவிட்டார்.

24-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும்
அதோடு, ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்க்கு எனவே, ஏப்ரல் 11-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்மானங்களுக்கு இடைக்கால தடை கேட்கும் மனுக்களை முன்கூட்டியே, அதாவது வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்று தேர்தலுக்கு தடை கேட்கும் வழக்குகளுடன் , அந்த இடைக்கால மனுக்களும் விசாரிக்கப்பட்டு, 24-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும்" என்று உத்தரவிட்டார்.

புரியாத புதிராக இருக்கிறது
இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இது புரியாத புதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஒரு புரியாத புதிராக இருக்கிறது. என்ன சொல்வதென்றே புரியவில்லை. இன்றைக்கே மன்னன் மகுடம் சூட்டிக்கொள்ள முடியாது.. அது தீர்ப்பாகிவிட்டது.. அது புரிகிறது. ஆனால் வழக்கு முன்கூட்டியே எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி இருந்தது இப்பொழுது மார்ச் 22ம் தேதி எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது தான் புரியவில்லை.

ஆலோசித்து முடிவு எடுப்போம்
என்ன அவசரம்..இதே நீதிபதிதான் இப்போ என்ன தேர்தலா நடக்கப்போகிறது. இப்போது உங்களுக்கு எதற்கு தடை என்று கேட்டார். அதே நீதிபதிதான் இப்போது முன்கூட்டியே கொண்டு வருகிறேன். என்ன அவசரம் என்பதுதான் எங்கள் கேள்வி.. ஆகவே எங்களது சட்ட வல்லுனர்கள், கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களோடு, கழக சட்ட ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரோடு கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எடுப்போம். நான் நீதிமன்றத்தையோ.. நீதிபதியையோ தவறாகவோ.. குற்றம்சாட்டியோ பேசவில்லை... ஒரு தேதியை நிர்ணயித்த பிறகு வழக்கை முன் கூட்டியே கொண்டு வருவது என்பது மிகவும் அரிதான வழக்குகளில் வேறு காரணங்களுக்காக கொண்டு வரப்படாலமே தவிர..இதே காரணத்திற்காக முன்கூட்டியே வழக்கை கொண்டு வருவது என்பது நான் அறியாத கேட்காத ஒன்றாக பார்க்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications