கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தை கையில் எடுத்த பாஜக அண்ணாமலை! தமிழக அரசு மீது விமர்சனம்
சென்னை: கால் அகற்றப்பட்ட 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரியா (வயது 17). மாவட்ட, மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி வளர்ந்து வரும் கால்பந்து வீராங்கனையாக இருந்தார்.
இந்த நிலையில் தனது வலது காலில் ஏற்பட்ட ஜவ்வு பிரச்சனை காரணமாக சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அவர் பரிசோதித்து இருக்கிறார்
சென்னையில் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்.. தவறான சிகிச்சை என குடும்பம் கதறல்
ரத்த ஓட்டம்
இதனை தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி 2 மருத்துவர்கள் வீராங்கனை பிரியாவுக்கு அதிநவீன அறுவை சிகிச்சையை செய்தனர். அதன் பிறகு அவருக்கு போடப்பட்ட கட்டு இறுக்கமாக கட்டப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் ரத்த நாளங்களும் பழுதடைந்தன.
தீவிர சிகிச்சை பிரிவு
இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 8 ஆம் தேதி அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு அனைத்து துறை மருத்துவ வல்லுநர்களும் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். ரத்த நாள பாதிப்பு காரணமாக ரத்த ஓட்டம் நின்றுவிட்டதால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழப்பு
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பிரியாவின் சிறுநீரகம், ஈரல், இதயம் ஆகிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது. ரத்த ஓட்டம் தடைபட்டதால் தொடர்ச்சியாக அவரது உடல்நிலை மோசமடைந்தபடி இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 7:15 மணியளவில் வீராங்கனை பிரியா காலமானார்.
மா.சுப்பிரமணியன்
இதனை அடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். கவனக்குறைவாக நடந்துகொண்ட 2 மருத்துவர்களும் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறி அவர், துறை ரீதியாக விசாரணை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
"இன்று மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். காவல்துறையிடம் புகாரளித்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். வீராங்கனையின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்க உத்தரவிட்டு உள்ளது. பிரியாவின் சகோதரர்கள் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முடிவெடுத்து உள்ளோம்." என்றார்.
தந்தை கோரிக்கை
இந்த நிலையில் தனது மகள் பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அவரது தந்தை ரவி வலியுறுத்தி இருக்கிறார். இது இதுபோல் எந்த நிகழ்வும் அரசு மருத்துவமனையில் நடக்கக்கூடாது என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.
அண்ணாமலை ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.
திறனற்ற திமுக ஆட்சி
சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.
ரூ.2 கோடி நிவாரணம்
தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.