காந்தியின் 20 வருட உழைப்பு.. வானதியின் 8 ஆண்டு முயற்சி.. அதனால்தான் வெற்றி.. எஸ்.வி.சேகர் பளிச்
சென்னை: நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருடன் ஒரு நேர்காணல். சட்டசபைத் தேர்தல் முதல் திருமாவளவன் வரை விரிவாகவே நம்முடன் ஜூம் நேர்காணலில் உரையாடினார்.. அந்த உரையாடலிலிருந்து சில பகுதிகள் உங்களுக்காக:
பிஜேபி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
வெற்றியாக தான் பார்க்கிறேன். 4 தொகுதி என்பதைவிட இன்னும் கடுமையாக உழைத்து இருந்தால் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கும். வேட்பாளர்களை சரியான முறையில் தேர்ந்தெடுத்து தொகுதிகளை ஒதுக்கி இருந்தால் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கும். 4 பேர் வெற்றி பெற்றதற்கு கடுமையான உழைப்பே காரணம். 8 வருடங்களாக ஒரே தொகுதியில் மக்களுக்காக வேலை பார்த்தவர் வானதி ஸ்ரீனிவாசன். 20 வருடங்களாக அதே தொகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் எம். ஆர். காந்தி. இதுவே அவர்கள் வெற்றி பெற காரணம். மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். உலகநாயகன் கமல்ஹாசனை கூட மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பிஜேபி வெற்றி பெற்றுள்ள 4 தொகுதிகளில் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் ஏற்படுமா?
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பொறுத்தே இருக்கும். நான் அதிமுகவில் நின்று வெற்றி பெற்றபோது மயிலாப்பூருக்கு எம்.எல்.ஏவாக தான் இருந்தேன். அது அனைத்து கட்சியினருக்கும் சார்ந்த எம்எல்ஏவாக இருந்தேன். ஏனென்றால் நான் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றவன் பொதுவான எம்.எல்.ஏவாக இருந்தால் ஆளும் கட்சியின் ஆதரவானது நமக்கு கிடைக்கும். ஊழலற்ற எம்.எல்.ஏ. என்ற பெயரையும் நான் வாங்கியுள்ளேன். எஸ்.வி.சேகரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டாலும் அவர் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தேன்.
பிஜேபி வெற்றி பெற்றதை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்
பிஜேபி 4 தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறது என்பது ஒரு மிகப்பெரிய வெற்றி. பிரதமரின் அனைத்து அலைகளையும் அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்லவில்லை. அப்படி கொண்டு சென்று இருந்தால் இன்னும் மிகப்பெரிய வெற்றியானது கிடைத்திருக்கும். பிஜேபி 4 தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறது திருமாவளவன் போன்றவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மருத்துவமனையில் இருக்கும் பொழுது 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்து பிஜேபி ஆட்சி அமைக்க நினைக்கிறதே என குற்றச்சாட்டு எழுகிறது?
3 நியமன எம்எல்ஏக்களை நியமிப்பது என்பது முதல்வரின் கையெழுத்து இல்லாமல் நியமிக்க முடியாது. அவர்கள் கையெழுத்திட்ட பின்னரே நியமனமானது செய்யப்பட்டுள்ளது.
20 வருடங்களுக்குப் பிறகு பிஜேபி சட்டமன்றத்தில் கால் பதித்துள்ளது தமிழக அரசின் ஆக்கப்பூர்வமான திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருமா?
கண்டிப்பாக ஒத்துழைப்பு தரவேண்டும் மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தருவது போலவே ஒத்துழைக்க வேண்டும். எந்த மாநிலமாக இருந்தாலும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் கேட்பதை விட அதிகமாக பெறமுடியும். இது போன்ற கையாடல்களை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றாக தெரிந்து செயல்படுவார், என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் எதிர்கட்சி தலைவர்களின் அணுகுமுறையானது இப்படி இருக்க வேண்டும்?
எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக, பிஜேபி உள்ளனர். வேல்முருகன் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஸ்டாலின் வந்த முதல் நாளிலேயே 5 கையெழுத்து போட்டுள்ளார். தனியார் மருத்துவமனைகளில் இலவசம் என்ற திட்டமானது மத்திய அரசு கொண்டு வந்தது தான். ஆனால் அதை செயல்படுத்துவது மாநில அரசு தானே. இதனை அனைவரும் கைதட்டி வரவேற்க வேண்டும்.
கொரோனா போரில் மாநில அரசுக்கு மத்திய அரசு என்ன மாதிரியான உதவிகளை செய்ய வேண்டும்?
மத்திய அரசு தேவையைப் பொறுத்து மருந்தானது அனுப்பப்படுகிறது. இதில் அரசியல் ஏதும் இல்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன மாதிரியான விஷயங்களை முன்வைத்தது. இன்று அவர்களே எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். என்னை பொறுத்தவரையில் இந்த மாதத்திற்குள் கொரோனா கட்டுக்குள் வரும். அரசாங்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எஸ்.வி.சேகர் பதிலளித்தார்.