ஒரு மாதத்தில் தமிழக பாஜக தலைமை மாறுகிறதா? எஸ்.வி.சேகர் இப்படி சொல்கிறாரே!
சென்னை: இன்னும் ஒரு மாதம்தான், தமிழக பாஜக தலைமை மாறப்போகிறது என்று, பாஜக நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
பாஜகவில் மும்முரமாக செயல்பட்டு வந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர். ஆனால், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து, அவர் தெரிவித்த சர்ச்சை கருத்தையடுத்து, பாஜக தலைவர் தமிழிசை, அவரை பாஜக அலுவலகத்திற்குள்ளேயே வரக்கூடாது என்று உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், சென்னை மந்தைவெளியில், பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை எஸ்.வி.சேகர் நடத்தினார்.
கூப்பிடவில்லை
நிகழ்ச்சியின்போது எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் கூறுகையில், நான் பாஜகவில் சேர்ந்தது முதல் என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக மட்டும் கூப்பிட்டார்கள்.
மாறப்போகுது தலைமை
எதற்காக என்னை அழைப்பதில்லை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. தமிழக பாஜத தலைமை மாற்றப்பட வேண்டியது அவசியம். அடுத்தமாதம் அல்லது செப்டம்பருக்குள் ஆட்சி மாற்றம் நடக்கும். அதன்பிறகு, எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும்.
சங்கர மடம் பற்றி சொன்னார்கள்
உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது அந்த கட்சியின் உள் விவகாரம். அதை ஏற்பதும், ஏற்காததும் திமுகவினரின் முடிவு. வாரிசு அரசியல் செய்ய திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று கருணாநிதி தெரிவித்து இருந்தார். அதை அவரது மகனான மு.க.ஸ்டாலின் பொய்யாக்கி இருக்கிறார் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இவ்வாறு எஸ்வி சேகர் தெரிவித்தார்.
தமிழிசைக்கு சிக்கல்
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டனர். எதிலுமே அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே தற்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மாற்றம் செய்ய கோரிக்கைகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.