காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்.. குப்பைகளை சேகரித்த ஆளுநர் ஆர் என் ரவி கொந்தளிப்பு
சென்னை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தூய்மை பணியில் ஈடுபட்டார். மாணவர்களுடன் இணைந்து ஆளுநர் ரவி தூய்மை பணியை மேற்கொண்டார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ரவி, காந்தி மண்டபத்தில் மதுபாட்டில்கள் கூட கிடக்கின்றன. இது மிகவும் வருத்தமளிப்பதாக கூறினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அடையாறில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டார். அக்டோபர் 2 ஆம் தேதி நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை பணியில் ஆளுநர் ரவி ஈடுபட்டார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

கையில் பக்கெட்டுடன் காந்தி மண்டபத்தில் கிடந்த குப்பைகளை ஆளுநர் ரவி சேகரித்தார். காந்தி சிலையையும் தூய்மைப்படுத்தினார். ஸ்வச் பாரத் அபியான் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியுள்ளது.
நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின்படி பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை முக்கிய பிரமுகர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தான் ஆளுநர் ரவியும் இன்று சென்னை அடையாறில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை பணி மேற்கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் இணைந்து மாணவர்களும் காந்தி மண்டப வளாகத்தில் உள்ள குப்பைகளை சேகரித்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு காந்தி மண்டப வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காந்தி மண்டப வளாகத்திற்கு வெளியேயும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர் என் ரவி கூறியதாவது:- மகாத்மா காந்தி தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல, அவர் தூய்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்.
காந்தி மண்டபத்தில் மதுபாட்டில்கள் கூட கிடக்கின்றன. இது மிகவும் வருத்தமளிக்கிறது. சுத்தம் என்பது அனைவருக்கும் பழக்கமாக இருக்க வேண்டும். சுத்தம் இல்லாததால் தான் பல நோய்கள் பரவுகின்றன. தினந்தோறும் நம் வாழ்வில் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி கூறினார்.












Click it and Unblock the Notifications