16 மணி நேரம் வேலை.. குறைந்த சம்பளம்.. சென்னையில் போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி ஊழியர்கள்!
சென்னை: சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் இன்று அதிகாலையில் இருந்து போராட்டம் செய்து வருகின்றனர்.
ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் டெலிவரி மேன்களாக வேலை செய்யும் நபர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை என்ற புகார் உள்ளது.
இவர்களுக்கு நீண்ட நேரம் வேலை கொடுத்து, பல டெலிவரி கொடுத்தும் கூட போதிய வருமானம் வழங்கப்படுவது இல்லை என்ற புகார் உள்ளது.
இதை எதிர்த்து பல முறை ஸ்விக்கி ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டங்களை செய்துள்ளனர்.
ஸ்விக்கி, சோமாட்டோவுக்கே போட்டி! களத்தில் இறங்கிய தபால் துறை! என்னல்லாம் டெலிவரி செய்யுறாங்க பாருங்க
மாற்றம்
இந்த நிலையில் சென்னையில் ராயப்பேட்டை, தி நகர் உள்ளிட்ட 5 ஸ்விக்கி மண்டலங்களில் திடீரென ஸ்விக்கி விதிமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த மண்டலங்களில் வேலை செய்யும் ஸ்விக்கி ஊழியர்களின் வேலை நேரம் 16 மணி நேரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான வருவாயும் குறைக்கப்பட்டு உள்ளது. இது ஸ்விக்கி ஊழியர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து ஸ்விக்கி ஊழியர்கள் இன்று அதிகாலையில் இருந்து போராட்டம் செய்து வருகின்றனர். நேற்று செய்யப்பட்ட போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் இன்று போராட்டம் தொடங்கி உள்ளது.
போராட்டம்
இவர்கள் 16 மணி நேரம் வேலை பார்த்தாலும் முன்பு கிடைத்ததை விட இவர்களுக்கு குறைவான வருமானமே நேற்று கிடைத்துள்ளது. அதேபோல் வார ஊக்கத்தொகையையும் ஸ்விக்கி நிறுவனம் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்விக்கி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஸ்விக்கி சார்பாக இதை எதிர்த்து போராட்டம் செய்யப்பட்டது. ஆனால் அவர்களிடம் போலீசார் பேசி சமாதானம் செய்தனர்.
ஏன் போராட்டம்
ஸ்விக்கி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். போராட்டம் செய்ய வேண்டாம். போராட்டத்தை கைவிடுங்கள் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர். போலீசார் கோரிக்கையை ஏற்று ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் கலைந்து சென்றனர். ஆனால் ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய விதிகள் இன்றும் மாற்றப்படாமல் தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது. புதிய வருமான நிர்ணயம்தான் இன்றும் அமலில் இருந்துள்ளது. இதனால் ஸ்விக்கி ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
காரணம் என்ன?
சென்னையில் 300+ ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதன் காரணமாக ஆன்லைன் டெலிவரிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த 5 மண்டலங்களில் கொண்டு வரப்பட்ட விதிமுறை மாற்றம் மற்ற மண்டலங்களுக்கும் கொண்டு செல்லப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மற்ற மண்டலங்களை சேர்ந்த ஸ்விக்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்து உள்ளனர். இவர்களிடம் தற்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.