சென்னையில் ஸ்விகி டெலிவரி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. உணவு டெலிவரி கடுமையாக பாதிப்பு
சென்னை: தலைநகர் சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி டெலிவரி ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. இந்தியாவில் பல நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகிறது.
பயனாளர்களிடம் இருந்து சிறிய தொகையைப் பெற்றுக் கொண்டு இந்த நிறுவனங்கள் உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது.
திருமணம், முடி சூடல், உடல் அடக்கம்.. எல்லாமே ஒரே இடத்தில்.. ராணி எலிசபெத் வாழ்க்கையின் ஒற்றை புள்ளி
உணவு டெலிவரி
முதலில் நகரங்களில் மட்டுமே இருந்த இந்த சேவை இப்போது மாநிலத்தில் இருக்கும் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. டெலிவரிக்கு சிறு தொகை மட்டுமே செலுத்த வேண்டும் என்பதாலும் உணவு நேரடியாக வீட்டிற்கு வந்துவிடுகிறது என்பதாலும் பொதுமக்கள் பலரும் உணவு டெலிவரி சேவையை அதிகம் விரும்புகின்றனர். இதுவே இந்த நிறுவனங்கள் ஹிட் அடிக்க காரணமாக உள்ளன.
ஊழியர்கள்
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே வீடுகளிலேயே முடங்கி இருந்த நிலையில், உணவு டெலிவரி செய்ய இதுபோன்ற செயலிகளே பெரியளவில் உதவின. அதேநேரம் டெலிவரி ஊழியர்கள் சில காலமாகவே இதில் பிரச்சினை எதிர்கொண்டு வருவதாகப் புகார் கூறி வருகின்றனர். ஏனென்றால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள், நிரந்தர ஊழியர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
ஊக்க தொகை
மாறாக அவர்கள் பார்டனர் ஊழியர்களாகவே கருதப்படுவார்கள். ஒரு நாளில் எத்தனை டெலிவரி செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். டெலிவரி செய்யும் போது அவர்களுக்குக் கிடைக்கும் காசு குறைவுதான் என்றாலும் இதுபோல கிடைக்கும் ஊக்கத்தொகை அவர்கள் தங்கள் செலவுகளைச் சமாளிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் போராட்டம்
இந்தச் சூழலில் தலைநகர் சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி டெலிவரி ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஸ்விகி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தலைநகர் சென்னையில் உணவு டெலிவரி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
என்ன காரணம்
புதிய விதிமுறைகளின் படி எவ்வளவு டெலிவரி செய்தாலும் எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் ஒரே ஊதியம் கிடைக்கும் என டெலிவரி ஊழியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாகப் பழைய நடைமுறைப்படி ஊக்கத்தொகை மற்றும் ஊதியம் வழங்கக் கோரி ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.