45 நிமிட பயணம் இனி வெறும் 5 நிமிடம்.. தி நகர் மேம்பாலம் நாளை திறப்பு.. குமரகுருபரன் ஐஏஎஸ் வீடியோ
சென்னை: சென்னையின் முதல் இரும்பு மேம்பாலம் அண்ணா சாலை சந்திப்பு தொடங்கி அப்படியே தியாகராய நகர் வடக்கு தெற்கு உஸ்மான் சாலைக்கு எளிதாக போகும் வகையில் போடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு 164 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. தி நகரில் போக்குவரத்து நெரிசலை பெரிய அளவில் குறைக்க போகும் அந்த பாலம் நாளை திறக்கப்படுகிறது. அதன் சிறப்பு பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐஏஎஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை தி நகர் மிகவும் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஜவுளி மற்றும் தங்க நகை வணிகம் நடைபெறும் பகுதியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சென்னையின் ஒரு பகுதி மக்கள், இன்னொரு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் திநகர் முக்கியமான இணைப்பு பகுதியாக இருக்கிறது.

தி நகர் பாலம் முக்கியமானது ஏன்
குறிப்பாக சொல்வது என்றால், வடபழனி, கோயம்பேடு,அண்ணா நகர், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம் அம்பத்தூர், ஆவடி என பல்வேறு பகுதி மக்கள், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், அண்ணா சாலை செல்ல தி நகர் இணைப்பு முக்கியமானது. அதேபோல் அசோக் நகர், சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம் என சுற்றியுள்ள மக்கள் அனைவரும் திநகரை கடக்காமல் கடந்து செல்லவே முடியாது. இதனால் எப்போதும் நெரிசல் மிகுந்த பாதையாக தி நகர் இருக்கிறது.
வேளச்சேரி போவது எளிது
அதாவது அண்ணா நகர், நுங்கம்பாக்கம், திருமங்கலம், அம்பத்தூர், கோடம்பாக்கம், ஆவடி மக்கள், சென்னையில் வேளச்சேரி, ஓஎம்ஆர் சாலை, கந்தன்சாவடி, ரேடியல் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர் மற்றும் கிண்டியில் தொழில் நிறுவனங்களில் வேலை செய்ய தி நகர் வழியைத்தான் போக முடியும். வட சென்னை, தென் சென்னையும் இணைக்கும் வகையில் இருக்கிறது.
வட சென்னை தென் சென்னை இணைப்பு
ஏனெனில் தி நகர் பேருந்து நிலையம் வழியாக நுங்கம்பாக்கம் சாலையை பிடித்து லயோலா கல்லூரி வழியாக அண்ணா நகர், நியூ ஆவடி ரோடு, பூந்தமல்லி ஹைரோடு செல்வது மிகவும் எளிது. அதேபோல் கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு செல்வது எளிது. இதனால் அந்த சாலையை தான் பலரும் பயன்படுத்துகிறார்கள். மிகவும் சிறிய சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள சாலை என்பதால் தி நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
உதயநிதி தொடங்கி வைத்தார்
இந்நிலையில் நெரிசலை குறைக்க அண்ணா சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை இணைத்து புதிய மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டது. அதன்படி தி.நகர், உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை அமைய உள்ள புதிய மேம்பாலத்திற்கான பணிகளை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.
சென்னையின் முதல் இரும்பு மேம்பாலம்
சென்னையின் முதல் இரும்பு மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.. இந்த மேம்பாலம், 55 துாண்களுடன் 7.5 மீட்டர் அகலம் உடைய இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. தி.நகர், துரைசாமி சாலை -- உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை தகர்த்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
An informative video about the T Nagar Bridge @chennaicorp pic.twitter.com/R4OlrAkuf2
— Kumaragurubaran (KGB) (@kgbias) September 29, 2025
45 நிமிடமல்ல 5 நிமிடம்
இந்த இரும்பு மேம்பாலம் 6.5 மீட்டர் உயரம் மற்றும் 30 அடி ஆழம் கொண்டதாகவும், பாலத்தின் விரிவாக்க இணைப்புகள் 75 மீட்டர் இடைவெளியில் 20 மீட்டர் கான்கிரீட் கொண்டும் அமைக்கப்பட்டன. 3800 மெட்ரிக் டன் இரும்புடன் மேம்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் வழியாக 45 நிமிட பயணம் இனி வெறும் ஐந்து நிமிடம் போதும். இந்த மேம்பாலம் மிக குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை (செப்டம்பர் 30ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இதுபற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐஏஎஸ் ட்ரோன் வீடியோ வெளியிட்டு சிறப்புகளை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications