விஸ்வரூபம் எடுக்கும் தி.நகர் சத்யா விவகாரம்.. அதிரடி விசாரணையில் குதித்த ஐவர் குழு!
சென்னை: அதிமுகவில் தி.நகர் சத்யா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதையடுத்து முதல்வர் உத்தரவுப்படி ஐவர் குழு விசாரணை நடத்தியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளராக இருக்கும் தி.நகர் சத்யா மீது சமீபகாலமாக ஏகப்பட்ட புகார்கள். அதிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆகாத நபர் இவர். ஆனாலும் கூட புகார்களை தாண்டி பெரும் செல்வாக்குடன் கட்சியில் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன், ஜெயலலிதாவே செய்யாத ஒரு அதிரடியை கட்சியில் செய்தார் சத்யா. அதாவது தன் மாவட்டத்தின் கீழ் வரும் கழக பகுதிகளில் ஒரே நாளில் முந்நூற்று எழுபது பேரை கட்சியிலிருந்து தூக்கினார். அதற்கு பின் அப்பதவிகளில் புதிதாக நபர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது 'பணம் வாங்கிக் கொண்டு புதியவர்களுக்கு பதவி தரப்பட்டிருக்கிறது! மாற்றுக் கட்சியிலிருந்து வந்தோருக்கு முறைகேடாக பதவி தரப்பட்டுள்ளது!' என்று புகார்கள் வெடித்தன.
பதவியை இழந்தவர்கள் சில முக்கிய அமைச்சர்களின் வீடுகளுக்கு சென்று முறையிட்டனர். பலனில்லை. இறுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தலைமை கழகத்தையே முற்றுகையிட்டனர். போலீஸ் தடுத்ததால் ரகளையானது. 'எங்க கட்சி அலுவலகத்துக்குள்ளேயே எங்களை விடமாட்டேங்றீங்களா? அம்மா இருந்தா இப்படி நடக்குமா?' என்று பொங்கி கதறினர்.
இது தலைமை வரையில் செல்ல, அடுத்த சில நாட்களில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது 'சசிகலா மற்றும் தினகரன் டீமை நம்ம கட்சி ஒதுக்கி வைத்துள்ளது. ஆனால் சத்யாவால் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் முக்கியமானோர் சிலர், தினகரனின் மச்சானான டாக்டர். வெங்கடேஸை சந்தித்து சால்வை அணிவிச்சிருக்காங்க. அப்போ அன்னைக்கு தினகரன் சொன்னபடியே நம்ம கட்சிக்குள்ளே அவருக்கான ஸ்லீப்பர் செல்கள் இருக்குறாங்கன்னுதானே அர்த்தம்.
தினகரன் ஆதரவாளர்களுக்கு நம்ம கட்சியில் புது பதவி கிடைக்குது. ஆனால், அம்மாவால் நியமிக்கப்பட்டு, இன்று தலைவர் இ.பி.எஸ்.ஸின் ஆதரவாளராக இருக்கும் எங்களுக்கு பதவிகள் பறிபோகுது! பணத்தை கொட்டினால் பதவி, விஸ்வாசத்தை காட்டினால் பறிப்பா?" என்று தைரியமாக பொங்கிவிட்டனர்.
இந்த திடீர் பாய்ச்சலில் அரண்டு போன் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் 'சரி இனி சத்யாவிடம் விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுப்போம்.' என்று சொல்லி அனுப்பிவிட்டனர்.
அவர்கள் சென்ற பிறகு ஆலோசனை செய்த ஐவர் குழு என்ன நடக்குது நம்ம கட்சியில? என்று நொந்து கொண்டனராம் தங்களுக்குள்ளே.
- ஜி.தாமிரா












Click it and Unblock the Notifications